ADVERTISEMENT

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ; கையும் களவுமாக கைது செய்த போலீஸ்

03:58 PM Mar 05, 2024 | ArunPrakash

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி(51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி, மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் கிராமத்தில் 1200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை ஒரு லட்ச ரூபாய்க்கு கடந்த 21.2.2024 அன்று வாங்கியிருக்கிறார்.

ADVERTISEMENT

இவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மற்றும் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட சித்தநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளது. அதன் பேரில் சமுத்திரம் வி.ஏ.ஓ. கூடுதல் பொறுப்பு சித்தாநத்தம் வி.ஏ.ஓ.வாக உள்ள சிவ செல்வகுமார்(41) என்பவர் வையாபுரியை தொலைபேசியில் அழைத்து பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதன் பேரில் வையாபுரி கடந்த 1.3.2024 மதியம் பட்டா பெயர் மாற்றத்துக்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ. சிவ செல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வி.ஏ.ஓ செல்வகுமார் தனக்குத் தனியாக 2000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர்மாற்றம் செய்வதற்கு உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி தான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன் என்று கெஞ்சி கேட்டதால், வி.ஏ.ஓ சிவ செல்வகுமார் தான் கூறிய தொகையில் பாதியை குறைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி, திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று (5.3.2024) மதியம் 12 மணியளவில் சமுத்திரம் வி.ஏ.ஓ அலுவலகம் சென்று, சிவ செல்வகுமார் வையாபுரியிடமிருந்து 1000 ரூபாய் லஞ்ச பணத்தை பெற்ற போது, கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT