ADVERTISEMENT

பூசாரி கொலை வழக்கில் மனைவி, மகள், மகள் காதலன் கைது... 

01:00 PM Aug 15, 2020 | rajavel

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள வடவாம்பலம் இந்த ஊரைச் சேர்ந்த பூசாரி தனசேகரன். இவர் தனது வீட்டில் இரவில் தூங்கும் போது 12ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த விசாரணையில் பூசாரி தனசேகரன் மனைவி ராஜேஸ்வரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் எனது மூத்த மகள் சத்யாவுக்கும் சின்னநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து வைத்தோம். திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் குமாரின் உறவினர் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் அடிக்கடி மகள் சத்யா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது என் மகளுக்கும் முருகவேலுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை குமார் கண்டித்துள்ளார்.

இது தெரிந்ததும் கணவன் மனைவி இடையே மேலும் பிரச்சினை அதிகரித்தது. இந்த நிலையில் எனது மகள் கர்ப்பமடைந்தார். பிரசவத்திற்காக எனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தோம். அவருக்கு ஆறு மாதம் முன்பு பெண் குழந்தை பிறந்த நிலையில் ஆறு மாதம் கழித்து குமார் வந்து சத்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்தார். குமார் எனது மகளை சரியாக பார்த்துக் கொள்ளிததால் நான் அனுப்பி வைக்கவில்லை. இந்த நிலையில் முருகவேல் குழந்தை பிறந்த பிறகும் எனது மகளை எங்கள் வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்து விட்டுப் போவார். அப்போதுதான் எனது கணவருக்கு மகள் சத்யாவிற்கும் முருக வேலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதனால் முருகவேல் இனிமேல் நமது மகளை சந்திக்க கூடாது என்று சத்தம் போட்டார். இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து என்னிடமும் மகளிடமும் பிரச்சனை செய்து வந்தார். பொறுத்து பார்த்தோம் என் கணவர் சத்யாவின் கள்ளக்காதலன் முருகவேலை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தொடர்ந்து பிரச்சினை செய்ததால் என் கணவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

மேலும் இதற்கு உடந்தையாக முருகவேல் இருந்தார். சம்பவத்தன்று குடிபோதையில் எனது கணவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நானும் எனது மகளும் சேர்ந்து கத்தி அரிவாள் மணையால் தலை உடல் பகுதியை வெட்டி படுகொலை செய்த பின்னர் ஒன்றும் தெரியாதது போல் ரத்தக்கறையான ஆடைகளை மறைத்து வைத்து விட்டோம். நள்ளிரவானதும் ரத்த வெள்ளத்தில் எனது கணவர் இறந்து கிடக்கும் தகவலை அப்போது தான் பார்த்தது போல் கத்தி சத்தம் போட்டோம் ஊர்மக்கள் ஓடி வந்தனர். கொலையை மறைக்க நாடகமாடினோம். போலீசார் எங்களை கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு தனசேகரன் மனைவி ராஜேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ராஜேஸ்வரி அவரது மகள் சத்யா, கொலைக்கு உடந்தையாக இருந்த சத்யாவின் கள்ளக்காதலன் முருகவேல் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT