Skip to main content

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; டியூஷன் ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Salem incident

 

சேலத்தில், எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக டியூஷன் ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

சேலம் கன்னங்குறிச்சி சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (35). எம்.ஃபில் பட்டதாரி. வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் நடத்தி வருகிறார். அப்பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமி ஒருவர், விக்னேஷின் டியூஷன் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். அந்தச் சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.  

 

மார்ச் 28ம் தேதி மாலையில் வழக்கம்போல் டியூஷனுக்கு சென்ற சிறுமி சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிச் சென்றிருக்கிறார். சீக்கிரத்திலேயே டியூஷனில் இருந்து திரும்பி வந்தது குறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது அந்தச் சிறுமி, தன்னை தேவையில்லாத இடங்களில் தொட்டு, தகாதசெயல்களில் ஈடுபடுவதாக விக்னேஷ் மீது புகார் சொல்லி இருக்கிறார்.  

பதற்றம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு, விக்னேஷின் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். சிறுமியின் குற்றச்சாட்டை மறுத்த அவரை, எல்லோரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் விக்னேஷை பிடித்துச் சென்று, சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகாரும்  அளித்தனர்.

 

காவல் ஆய்வாளர் சிவகாமி, டியூஷன் ஆசிரியர் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். இந்தச் சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்