ADVERTISEMENT

தொடர்ந்து குறையும் தக்காளியின் விலை

08:44 AM Aug 11, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 500 ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அண்மையில் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு சில தினங்களாகத் தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 முதல் 140 ரூபாய் வரை விற்ற நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 50 ரூபாய் குறைந்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் விளையும் தக்காளிகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளதால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து தக்காளி விலை குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். தக்காளி விலை குறைவால் அரசு சார்பில் விற்பனை செய்யப்படும் பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் ரேசன் கடைகளில் நேற்று முதல் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT