Drastically low tomato prices The public is relieved

தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கொள்முதல் செய்து 62 பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள 500 ரேசன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

அண்மையில் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு சில தினங்களாகத் தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 முதல் 140 ரூபாய் வரை விற்ற நிலையில், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று பெங்களூரு தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 52 ரூபாய் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று தமிழ்நாட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் விளையும் தக்காளிகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளதால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.