Skip to main content

விபத்தில் காயமடைந்தவரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை... தாயின் மடியிலேயே மகன் உயிர் போன பரிதாபம்!!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

 There is no ambulance to take the injured in the accident

 

 

தனியார் பால் ஏற்றிச்சென்ற வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்திலேயே காயமடைந்தவரை சிகிச்சைக்கு ஏற்றிச்சென்றனர். மேல் சிகிச்சைக்கு செல்லும்போது தாயின் மடியிலேயே மகன் உயிர்பிரிந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவரின் மகன் ராஜமான் (வயது 22). இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். புதன்கிழமை மதியம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்த ராஜமான் கடைவீதிக்கு செல்ல ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றபோது நகரம் சன்னதி பிரிவு சாலையிலிருந்து பிரதான சாலையை கடக்க முயன்றபோது கீரமங்கலத்தில் இருந்து கைகாட்டி நோக்கிச்சென்ற தனியார் பால் வாகனம் எதிர்பாராதவிதமாக ராஜமான் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ராஜமான் படுகாயமடைந்தார்.

 

விபத்தில் காயமடைந்த ராஜமானை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்திலேயே அதன் ஓட்டுனர் மணிகண்டன், காயமடைந்து உயிருக்கு போராடிய ராஜமானை ஏற்றி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு  அனுப்புவதற்கு மீண்டும் ஆம்புலன்ஸ் இல்லாமல், ஒரு தனியார் காரில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

விபத்து குறித்த  தகவல் அறிந்து கதறிக்கொண்டு வந்த அவரது தாயார் மடியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜமான் உயிரிழந்தார். தாய் மடியிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆத்தாளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரனை செய்தனர்.

 

கீரமங்கலம் பகுதி மக்களின் சேவைக்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் கடந்த சில மாதங்களாக கரோனா பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்பட்டால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தனியார் வாகனங்களை பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கரோனா பணிக்காக அனுப்பப்பட்டுள்ள ஆம்புலன்ஸுக்கு பதிலாக மாற்று ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Due to the scorching heat, the two-wheeled vehicle is on incident

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தண்டபாணி மகன் விஷ்ணு (28). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் கோயில் எம்ஜிஆர் கல்லூரி பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்திலிருந்து ஏதோ புகை வந்ததை அறிந்த விஷ்ணு பதறிப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்க்கையில் பெட்ரோல் டேங்க்கில் இருந்து கசிந்த பெட்ரோல் வாகனத்தின் மீது பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஷ்ணு உடனடியாக நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகாமையில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி உள்ளார். இருப்பினும் தீ கட்டுக்கடங்காமல் இருசக்கர வாகனம் முழுவதும் மளமளவென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. வாகனம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு சிதறி ஓடி உள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் முழுவதும் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வெப்பம் கோடை காலங்களில் நிலவுகிறது. இந்த ஆண்டு வெப்ப காற்றும், வெப்ப சலனமும் தொடர்ச்சியாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக வீசிக் கொண்டிருக்கிறது. வேலூர், திருவண்ணாமலை,  திருப்பத்தூர், விழுப்புரம் போன்ற தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வானிலை மையத்தினரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர், குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இந்த அதீத வெப்பத்தால் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிப்பது, தீப்பற்றி எரிவது போன்றவை நடக்கத் தொடங்கியுள்ளன . இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கோடை காலங்களில் வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்ப வேண்டாம், டீசல் நிரப்ப வேண்டாம் தினமும் ஒரு முறையாவது பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து அதில் உள்ள காற்றை சிறிது நேரம் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்