ADVERTISEMENT

இரண்டாவது கணவரை கொலைச் செய்து வீட்டில் புதைத்த மனைவி உட்பட மூன்று பேர் கைது!

10:02 PM Apr 18, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்காசியை அடுத்த குத்துக்கல் வலசைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரின் மனைவி அபிராமி. இவர் அதே பகுதியில் ப்யூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கணவர் தங்கராஜ் நான்கு வருடங்களுக்கு முன்பு சில பிரச்சினை காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதால், தன் இரண்டு பிள்ளைகளுடன் அபிராமி தனியாக வசித்து வந்தார். இதனிடையே, மதுரைச் சாலையிலுள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பணிபுரிந்த தென்காசியைச் சேர்ந்த காளிராஜ் என்பவருடன் அபிராமிக்குப் பழக்கம் ஏற்பட்டது.

இதனையறிந்த காளிராஜியின் பெற்றோர் அவரை கண்டித்ததில், காளிராஜூவிற்கு அபிராமியுடனான தொடர்பை விட மனமில்லை. இதன் பின் 2017- ஆம் ஆண்டு அபிராமியைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொண்ட காளிராஜ், அவரோடு வாழ்ந்து வந்தார். இந்தச் சூழலில் காளிராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காணவில்லை. அது குறித்த புகாரும் அப்போதைய நிலையில் காவல்நிலையம் வரை போகவில்லை. ஆனாலும் இந்தத் தகவல் அரசல் புரசலாகப் காவல்துறை வரை போகவே, அவர்கள் அபிராமியிடம் விசாரித்த போது அவர் வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார் என்று கூறியுள்ளார். இதனால் காவல்துறையினருக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் சந்தேகம் வரவில்லை.

வெள்ளரிக்காய் பழுக்காமலிருக்க பூன் போட்டாலும் முடிகிற காரியமா? இயல்பாக வெடித்துக் கிளம்பத்தானே செய்யும். அதுதான் அபிராமி விஷயத்திலும். இந்நிலையில் அபிராமிக்கும் குத்துக்கல் வலசையிலுள்ள மாரிமுத்து என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது பற்றிய தகவல்கள் அந்தப் பகுதியிலிருந்தே காவல்துறையின் தனிப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்தது. அதே சமயம் காளிராஜின் தாய் உமாவும் தன்மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, அபிராமி, மாரிமுத்து ஆகிய இருவரையும் அழைத்துச் சென்ற காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தன்னை விட 10 வயது குறைந்த காளிராஜூடன் அபிராமி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போதே அது கசந்திருக்கிறது. அதன்பின் அபிராமிக்கு மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இது காளிராஜூக்குத் தெரியவர, பிரச்சினையானது. அவர் இருந்தால் தனக்கு இடையூறு எனத் திட்டமிட்ட அபிராமி, கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காளிராஜூவுக்கு மயக்க மருந்து கொடுக்க, அவர் தூங்கியபோது மாரிமுத்துவை அபிராமி அழைத்து வந்துருக்கிறார். பின்பு மாரிமுத்து, அபிராமி ஆகிய இருவரும் காளிராஜின் கழுத்தை நெறித்தும், கத்தியால் நெஞ்சைக் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் அபிராமியின் வீட்டில் அன்றாடம் பால் ஊற்றி வரும் பால்காரர் முருகேசன் என்பவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரிடம் உடலை மறைக்க உதவிக் கேட்டதில் மறுத்த அவரோ வீட்டில் புதையுங்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். அபிராமியும், மாரிமுத்துவும் சேர்ந்தே காளிராஜுவின் உடலை வீட்டில் புதைத்துவிட்டு ஒன்று மறியாதவர்கள் போல் நாடகமாடியுள்ளனர். பிணத்தின் மீதே இரண்டரை வருடம் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் குறிப்பிட்ட இடத்தைத் தாசில்தார் முன்னிலையில் தோண்டப்பட்டபோது மண்டை ஓடு மற்றும் எழும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அதன் பின்னர் அபிராமி, மாரிமுத்து மற்றும் கொலைச் சம்பவம் என்று தெரிந்தும் தகவலை மறைத்த பால்காரர் முருகேசன் ஆகிய மூன்று பேரையும் தென்காசி காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தையே அதிர வைத்திருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT