Skip to main content

விபரீதமான இரட்டைக் கொலை... தென்காசியில் பயங்கரம்! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

tenkasi district incident police investigation

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை மேக்கரை பகுதியிலுள்ள அடவி நயினார் அணைக்குச் செல்லும் சாலையின் அருகே வசித்து வரும் முகம்மது கனியின் மகன் காசிர் அலி (வயது 25). இவருக்கும் தென்காசி பகுதியின் ரஹ்மத்துல்லாவின் மகள் அசன்பீவிக்கும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் பொருட்டு, அசன் பீவி தன் தந்தை வீட்டுக்குப் போயிருக்கிறார். இரவு காசிர் அலி மற்றும் அவரது பாட்டி ஜெய்துன் பீவியும் (வயது 70) இருவர் மட்டுமே வீட்டில் தூங்கியுள்ளனர்.

 

இதனிடையே, தன் மகள் அசன்பீவியை மருமகனின் வீட்டில் கொண்டு சென்று விடும் பொருட்டு காசிர் அலியின் மாமனார் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை காசிர் அலியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அது சமயம் காசிர் அலி ரத்த வெள்ளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியானார்கள். தொடர்ந்து வீட்டின் அருகேயுள்ள தொழுவத்தில் பாட்டி ஜெய்துன் பீவியும் கொலை செய்யப்பட்டு, அரைகுறை ஆடையுடன் கிடந்திருக்கிறார். அருகே ஒரு சேவலும் இறந்து கிடந்திருக்கிறது. அதிர்ச்சியான இருவரும் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். தகவலறிந்த தென்காசி பொறுப்பு எஸ்.பி.யான சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினரின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.

tenkasi district incident police investigation

அச்சன்புதூர் காவல் அதிகாரியான இன்ஸ்பெக்டர் வேல்கனியின் தலைமையிலான போலீசார், விசாரணை தகவல் அடிப்படையில் மேக்கரைப் பகுதியின் முகம்மது காசிம் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகம்மது காசிம்மிற்கும், காசிர் அலிக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அன்றைய தினம் தகராறு ஏற்பட்டிருக்கிறது. பக்ரீத் அன்று காசிர் அலி வீட்டிற்குச் செல்ல, போதை ஏற்றிக் கொண்ட முகம்மது காசிம், காசிர் அலியின் வீடு சென்று அவரை வம்புக்கு இழுத்திருக்கிறார். 

 

போதையில் பெரிய கட்டையைக் கொண்டு காசிர் அலியின் தலையில் அடித்ததில், அவர் மண்டைப் பிளந்து ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார். சத்தம் கேட்டு வந்த பாட்டி ஜெய்துன் பீவியைத் தொழுவத்திற்கு இழுத்துச் சென்றவன் அவளது மார்பு வயிறு பகுதியில் மிதித்தவன் போதையில் பாட்டியைப் பாலியல் துன்புறுத்தியுள்ளான். பின்னர், கட்டையால் பாட்டியை அடித்துக் கொன்றிருக்கிறான். போலீசின் விசாரணையில், அன்றைய தினம் காலையில் நடந்த தகராறு பற்றித் தெரியவர உடனே போலீசார் முகம்மது காசிமை வளைத்துக் கொண்டு வந்திருக்கின்றனர் என்று அச்சன்புதூர் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

 

இரட்டைக் கொலையில் வயதான மூதாட்டியை வன்கொடுமைக்குட்படுத்தியது மேக்கரைப் பகுதியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.