Skip to main content

கழிவு நீரால் அவதிப்படும் நவக்கிரக ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில்..

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் எங்கு திரும்பினாலும் துர்நாற்றம் வீசுவதும்,ஈக்கள் கொசுக்கள் முகத்தில் வந்து மொய்ப்பதும் என சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவதுமாக இருக்கும் நிலையில் பெருகிவரும் சுகாதார சீர்கேட்டை சரி செய்ய அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம், தொகுதி எம்எல்ஏ வான பாரதியிடமும் தாசில்தாரிடமும் பலமுறை கொடுத்துவிட்டனர். அவர்கள் யாரும் காதில் வாங்கிக்கொள்ளாத நிலையில் நூதனமான முறையில் கோரிக்கைகளை மையமாக வைத்து போஸ்டர் அடித்து வீதிகள் தோறும் ஒட்டப்பட்டு அதன் மூலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்க வைத்திருக்கின்றனர்.

sewage issues in vaitheeswaran temple


நாகை மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதனமான முறையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டியை வைத்தீஸ்வரன்கோவில் முக்கிய பகுதிகளில் ஓட்டியுள்ளனர் பாஜகவினர். அதோடு வாட்ஸ் அப் குழுவிலும் அதை பதிவு செய்துள்ளனர். அந்த சுவரொட்டியில்  உள்ள கோரிக்கைகளோ," மாவட்ட ஆட்சியருக்கு கனிவான வேண்டுகோள், வைதீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இரட்டைப் பிள்ளையார் கோயில் தெருவில் சேறும் சகதியுமான சாலையை தார் சாலை அமைக்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டும், மேலவீதியில் தச்சர் தியாகி குமரன் தெரு சாலைக்கு இடையூறாக வழிவிடாமல் மழை நீர் வடிகால் கட்டிய நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்த வேண்டும், விளம்பர தட்டிகள் பந்தல் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மீன் மார்க்கெட் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் வடிகால் வாய்க்கால் பகுதிகளை சுகாதார நலன் கருதி சுத்தம் செய்யவும் கொசு ஒழிப்பு மருந்துகளை தினமும் தெளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." உள்ளிட்ட கோரிக்கைகளை அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் படித்து அவரவர்கள் வாட்சாப் குழுக்கள் மூலம் பரவச் செய்கின்றனர். இந்த தகவல் ஒருவழியாக நாகை ஆட்சியருக்கு செல்ல உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்.

இது குறித்து வைத்தீஸ்வரன் கோயிலை சேர்ந்த சமுக ஆர்வளர் ஒருவர் கூறுகையில், "நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதோடு நாடி ஜோதிடத்திற்கும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகின்றனர். இரண்டையும் நம்பி வீதிக்கு வீதி புதிது புதிதாக எவ்வீத பாதுகாப்பும் இல்லாமல் தனியார் விடுதிகள் முளைத்து அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை பொதுவெளியில் விடுவதால், அந்த கழிவுநீர் வடிய வசதி இல்லாமல் தேங்கி கோயில் குளத்திலேயே கலக்கும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. 

பல இடங்களில் கழிவுநீர் குட்டையாக தேங்கி ஈக்கள், கொசுக்கள், உற்பத்தியாகி பல்வேறு உடல் உபாதைகளை, நோய்களை, ஏற்படுத்துகிறது. அரசு அதிகாரிகள் ஆய்வுக்காக வந்தாலும் இங்குள்ள லாட்ஜ்க்களின் உரிமையாளர்களும் மற்றும் ஆக்கிரிமித்து வைத்திருக்கும் போலியான சில ஜோதிட நிலையத்தினரும் பணம் கொடுத்து சரி செய்துவிடுகின்றனர்.


இதனால் அரசின் கவனம் வைத்தீஸ்வரன் கோயில் பக்கம் வரமறுக்கிறது. அதோடு வைத்தீஸ்வரன் கோயில் பாரம்பரியமிக்க தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. ஆதீனம் வருமானத்தை மட்டுமே இலக்காக வைத்திருப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் மீது அவர் அக்கறை காட்டுவதில்லை. கோயிலை சுற்றி பொதுசுகாதார வசதிகள் கூட கிடையாது, குடிதண்ணீர் வசதி கிடையாது, எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. கோடிக்கணக்கில் வருமானம் வந்தாலும் ஆதீன நிர்வாகம் எதற்கெடுத்தாலும் அரசை மட்டுமே நம்பி இருப்பதால் பொதுமக்கள் கஷ்டப்படுகின்றனர்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

கரை ஒதுங்கிய மர்மப் பொருள்; பதற்றத்தில் மீனவ கிராமம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Mysterious object washed ashore in Sirkazhi; A fishing village in tension

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் 'அபாயம் தொட வேண்டாம்' என  ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றுள்ளனர் போலீசார். இது அந்த மீனவ கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.