தாயார் தன்னை தண்டிப்பார் என்ற பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரவாயல் சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி, தனது தம்பி நன்றாகப் படிக்கவில்லை என அவரை அடித்துள்ளார்.
மாணவி தனது தந்தைக்கு போன் செய்து தம்பி சரியாகப் படிக்கவில்லை அவனை நான் அடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் முருகன் வேலை முடித்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கும்போது, "தனது தம்பி படிக்கவில்லை என அடித்ததால், தனது தாயார் வந்து தன்னை தண்டிப்பார் என்ற பயத்தில் மாணவி தற்கொலை செய்திருக்கலாம்" என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தாய்க்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.