ADVERTISEMENT

சொந்த கிராமத்தில் சரவணபவன் ராஜகோபால் உடல் அடக்கம்(படங்கள்)

08:19 PM Jul 20, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சரவணபவன் ராஜகோபால் உடல் சொந்த கிராமமான புன்னையடிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை 5 மணிக்கு பூர்வீக தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

சரவணபவன் ஹோட்டல் என்று சொல்லும் போதே ஒரு பிரம்மாண்டம் இருக்கும். உணவின் தரத்திற்கு 2 இட்லிக்கு 4 வகை சட்னி என்று பிரம்மாண்டம் காட்டி சரவண பவன் எனும் மெகா பிராண்ட்டை உருவாக்கியவர் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி என்ற கிராமத்தில் 1947ம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். இவரது தந்தை ஒரு வெங்காய விவசாயி. வீட்டில் பெரியளவில் வசதி கிடையாது.

இதனால், சிறு வயதிலிலேயே அதிக கஷ்டங்களை அனுபவித்த ராஜகோபால், 1973ம் ஆண்டு சென்னைக்கு வந்து, கே.கே. நகரில் மளிகைக் கடை ஒன்றை திறந்தார். ‘அண்ணாச்சி கடை’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட, தொடர்ந்து நல்ல முறையில் கடையை நடத்தி வந்தார். அதில், அவர் எதிர்பார்த்த அளவுக்கு லாபமும் கிடைத்தது.

இந்நிலையில் கே.கே.நகரில் உள்ளவர்கள் தி.நகருக்கு சென்று ஹோட்டலில் சாப்பிடும் நிலை இருந்ததால் அவர்களது நலன் கருதி 1981ம் ஆண்டு கே.கே.நகரிலேயே ஒரு சிறிய ஹோட்டலை திறந்தார். அது தான் அவர் திறந்த முதல் ஹோட்டலாகும். முருகன் மீது அதீத பக்தி கொண்டதால் தனது ஹோட்டலுக்கு சரவணபவன் என பெயரிட்டார்.

இவரது ஹோட்டலின் சாம்பார், மற்ற இடங்களை விட சுவையாக இருந்ததால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மக்களாகவே இவரது கடைக்கு மார்க்கெட்டிங் செய்தனர். வாய் மொழியாகவே சரவணபவன் ஹோட்டலின் பெயர் பரவலாக சென்னை மாகாணம் முழுவதும் பரவியது.

மக்களின் ஆதரவு, எதிர்பார்த்ததை விட கிடைத்த வருமானம் என்ற இரண்டு தூண்களுடன் தனது வியாபாரத்தை விரிவுப்படுத்த தொடங்கினார் ராஜகோபால். அவ்வாறு தொடங்கிய முயற்சி இன்று இந்தியாவில் மொத்தம் 33 கிளைகள், வெளிநாடுகளிலும் ஹோட்டல்கள் என 45 கிளைகளை தாண்டி அவரது இரண்டு இட்லிக்கு 4 வகை சட்னி போல் தாராளமாகவும் பிரம்மாண்டமாகவும் பரந்து விரிந்துள்ளது. சென்னையில் தியாகராய நகர், அசோக் நகர், ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், வடபழனி (இரு கிளைகள்), அண்ணாநகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தி திரையரங்க கட்டிடம், பீட்டர்ஸ் சாலை, பாண்டி பஜார், சென்ட்ரல் தொடருந்து நிலையம், எழும்பூர், கடற்கரை ரயில் நிலையம், மயிலாப்பூர், அசோக் பில்லர், ஸ்பென்சர் பிளாசா, அசெண்டாஸ் தரமணி, வெங்கட நாராயணா சாலை, அண்ணா சாலை, ஆம்பிட் அம்பத்தூர் என்று சென்னையில் மட்டும் இத்தனை கிளைகள் திறந்தார்.

ஒரு குக்கிராமத்தில் இருந்து வந்து இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை ஒருவர் உருவாக்கி இருக்கிறார் என்றால், அதற்கு எவ்வளவு பெரிய தொழில் நேர்த்தி, உழைப்பு, கடமையுணர்வு, அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையால் ராஜகோபால் வீழ்ந்தாலும், அவர் உருவாக்கிய சரவண பவன் என்னும் தரம் (பிராண்ட்) என்றும் நிலைத்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரது உடல் சொந்த கிராமமான புன்னையடிக்கு இன்று காலை 7:30 மணிக்கு வந்தது. இன்று மாலை 5 மணிக்கு பூர்வீக தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT