ADVERTISEMENT

"மழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

04:13 PM Nov 21, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

69வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா கடலூர் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒருவார காலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று கடலூரில் நடைபெற்றது. விழாவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திலீப்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். விழாவில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 4765 பயனாளிகளுக்கு ரூபாய் 25 கோடி மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கினர். இதில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன், மத்திய காலக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கருணை கடன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத் துறையை டிஜிட்டல் மயமாக்கியுள்ளார். இதன் மூலம் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 159 கூட்டுறவு சங்கங்களில் 12,365 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரூபாய் 66 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பி செலுத்தாவிட்டாலும் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்கி வருகின்றன. இவ்வாறு லாபத்தில் இயங்குவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூபாய் 73000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2023) ரூபாய் 12000 கோடி கடன் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

ஆழ்துளை கிணறு அமைத்து மின் வசதி கிடைக்காத விவசாயிகள் நலன் கருதி ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கினார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 13,000 டன் அரிசி கடத்தல் தடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்று வருகிறது" என்றார்.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீர் வடிந்த பிறகு சேதங்கள் கணக்கெடுக்கப்படும். பயிர்கள் 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன்களை தள்ளுபடி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. அதையும் விரைவில் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT