அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் வடமாநில கும்பல் ஒன்று முகாமிட்டு குழந்தைகளை கடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் செம்படமுத்தூர் பகுதிக்கு சென்ற வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை அப்பகுதி மக்கள் குழந்தைகளை கடத்த வந்த நபர்கள் எனக்கருதி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த நான்கு பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அறிவிப்புக்கு பிறகும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.