ADVERTISEMENT

“தமிழகத்தில் இனி ஆட்சி மாற்றமே கிடையாது!” - தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் பேச்சு!

02:08 PM Jan 05, 2021 | santhoshkumar

ADVERTISEMENT

"தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால், ஏற்கனவே அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தன் வசதிகேற்ப தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது பாஜக" என தேசிய தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், "வளர்ந்த நாடுகளில் வாக்குப்பதிவு சீட்டு முறை அமலில் இருக்கும்போது, வளரும் நாடான இந்தியாவில் எதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்" என தேசிய தவ்ஹீத் ஜமாத் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுவை, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கூட்டமைப்பு தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், "விவசாயம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, மத்திய அரசு இதில் மூக்கை நுழைத்து மாநில அரசினுடைய அதிகாரங்களைப் பிடுங்கி, தற்போது வலுக்கட்டாயமாக இந்தப் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மாநில கட்டுப்பாட்டில் இருந்தவரை விவசாயிகளுடைய அனைத்து உற்பத்திப் பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும் பாதிக்கப்படுவோம். இன்று 50 ரூபாய்க்குப் பெறப்படும் ஒரு கிலோ அரிசி, நாளை தனியாருக்குத் தாரை வார்க்கும்போது 500 ரூபாய்க்கு வாங்கவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

மேலும் இந்தக் கூட்டத்தில், மூட நம்பிக்கை ஒழிப்பு, மூடநம்பிக்கை மீதான நம்பிக்கையை இஸ்லாமியர்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என்பதை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப் போவதாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முயற்சிசெய்து வருவதாகவும், அதன் முன்னோடி திட்டமான தேசிய குடியுரிமை பதிவு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் வாக்குச் சீட்டு மூலம் தேர்தலை நடத்துகின்றன.

இந்த முறையை இந்திய அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் குறைந்த காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடைய வாழ்க்கைத் தரமும் தொழிலும் முன்னேற, வட்டியில்லாத நீண்டகால கடன் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும், எரிவாயு விலையேற்றம் பொது மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது

‘லவ் ஜிஹாத்’ என்ற வார்த்தை ஆபத்தானது. அதிலும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ‘ஜிஹாத்’ என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்தி, மதவெறியுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றம் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை இருப்பினும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பல் முஸ்லிம்களைக் கத்திமுனையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்வதை தவ்ஹீத் ஜமாத் வன்மையாகக் கண்டிக்கிறது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT