ADVERTISEMENT

ஆதிவாசிகளோடு வசிக்கும் தல மலை "புலி"

08:14 PM Jan 20, 2020 | kalaimohan

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியான புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது.

தமிழகத்தில் சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை மற்றும் களக்காடு முண்டந்துறை என 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அதிக பரப்பளவுள்ள வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. ஆயிரத்து நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர் என்ற இரண்டு வனக்கோட்டங்களும், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், விளாமுண்டி, கடம்பூர், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி என பத்து வனச்சரகங்களும் உள்ளன.

ADVERTISEMENT


இந்த காட்டை அரசு 2013 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவித்தது அதன்பின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள மாயாறு ஆற்றுப்படுகை வனப்பகுதி, தெங்குமரஹாடா வனப்பகுதி, தலமலை, கேர்மாளம், ஜீரஹள்ளி மற்றும் பண்ணாரி வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் உள்ளது.

சத்திய மங்கலத்திலிருந்து தாளவாடி செல்ல பண்ணாரியிலிருந்து தொடங்கும் மலைப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மேல்மட்டமான திம்பம் மலைப்பகுதிக்கு செல்ல வேண்டும் பிறகு திம்பத்திலிருந்து இரண்டு வழிகளில் தாளவாடி செல்லலாம். ஒரு வழி ஆசனூர், கர்நாடகா பகுதியான புளிஞ்சூர் வழியாகவும் மற்றொறு வழி இடது புறமாக அடர்ந்த காட்டுக்குள் சென்று தலமலை வனப் பகுதி வழியாகவும் செல்லலாம்.

ADVERTISEMENT

இந்த தலமலை வனப்பகுதி சாலையின் பெயர் திப்புசுல்தான் சாலை, இந்த வனச்சாலை வழியாக பயணித்தால் யானைகள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைகள்,புலிகள் என காட்டு மிருகங்களின் குடியுரிமையை காணலாம். இந்த வனப்பகுதியில் பழங்குடியினர், ஆதிவாசிகள் என 24 குக்கிராமங்களில் மலை மக்கள் வாழ்கிறார்கள். நேற்று பகல் இந்த வனச்சாலையையொட்டியுள்ள வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டத்தை மலைகிராம மக்கள் பார்த்துள்ளனர்.

குறிப்பாக நேற்று பகல் திப்புசுல்தான் சாலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் புலி ஒன்று ஹாயாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்ததோடு தனது உடலை தரையில் உருட்டி உருட்டி விளையாண்டுள்ளது. அனேகமாக சமீப நேரத்தில் தான் தனக்கு தேவையான இரையை சாப்பிட்டு விட்டு செரிமானத்திற்காக உடலை அசைத்துக் கொன்டிருந்துள்ளது. இதை அவ்வழியே சென்றவர்கள் புலியை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

வனச்சாலையோர வனப்பகுதிகளில் தற்போது புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சாலையில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும் என மலைகிராம மக்களிடம் வனத்துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர். காட்டுக்குள் வாழும் இந்த மிருகங்களோடு தான் ஆதிவாசி, பழங்குடி மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT