திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே இருக்கக்கூடிய காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகை காரணமாக ஏற்கனவே மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மோடியைச் சந்தித்து வரவேற்க இருக்கும் நிலையில், பாஜக சார்பிலும் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை வந்திறங்கிய மோடி சிறிது நேரம் கழித்து மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.