ADVERTISEMENT

‘பல பேருக்கு வாழ்வு தந்த பெரியப்பா!’ -நினைவு நாள் போஸ்டரில் எம்.நடராஜன்!

04:53 PM Mar 20, 2020 | kalaimohan

வாழும் காலத்தில் நிழல் மனிதர் என்றே அழைக்கப்பட்டார், எம்.நடராஜன். சசிகலா நடராஜன் என, மனைவியின் பெயரை வைத்தும் அடையாளம் காணப்பட்டார். புதியபார்வை ஆசிரியர் என்பதெல்லாம் வெறும் லேபில்தான். ஆனாலும், ஒருகாலத்தில் அதிகார மையமாக தமிழக அரசியலை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மார்ச் 20, அவரது நினைவுநாள். ‘பல பேருக்கு வாழ்வு தந்த பெரியப்பா’ என்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மதுரையில் சொற்ப அளவில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். சின்னம்மா (சசிகலா) கணவர் எப்படி பெரியப்பா ஆனார்? என்ற கேள்விக்கு, “அந்தப் போஸ்டரை அச்சிட்டவருக்கு அவர் பெரியப்பா.. அவ்வளவுதான்.. ‘பல பேருக்கு வாழ்வு தந்தவர்’ என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று அவரது சொந்த பந்தங்களில் பலரும் அள்ள அள்ளக் குறையாத செல்வத்துடன் வளம்பெற்று வாழ்வதற்குக் காரணம், எம்.நடராஜனும் அவரது மனைவி சசிகலாவும்தான். நியாயமாகப் பார்த்தால், நடராஜனால் முன்னுக்கு வந்த அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த முன்வந்திருந்தால், தமிழகத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு இன்று சுவரே இருந்திருக்காது. அந்த அளவுக்கு சொந்தபந்தங்களில் இருந்து, அரசியல்வாதிகள் வரை பலருக்கும் அடையாளம் தந்திருக்கிறார். ஆனாலும், அரசியலில் அந்த விசுவாசத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாதே?” என்றார், சசிகலா ஆதரவாளர் ஒருவர்.

தமிழ் செயற்பாட்டாளர் என்பதால், 2009-ல் நடந்த ஈழத்தின் இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கினார், எம்.நடராஜன்.

அவ்வப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளான போதிலும், தமிழக அரசியலின் வரலாற்று பக்கங்களில் எம்.நடராஜனும் இடம் பிடித்திருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள்கூட இதை மறுக்க முடியாது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT