கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து என்பது அதிகரித்திருந்தது. கர்நாடகாவின் கபினி, கே.எஸ்.ஆர் அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 1.20 லட்சம் கன அடியாக தொடர்கிறது. தொடர் நீர் வரத்தால் சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 119.29 அடியாக அதிகரித்துள்ளது. தற்பொழுது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1,17,613 கன அடியிலிருந்து 1,18,671 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசன தேவைக்காக வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று 11 காலை 11 முதல் நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் சுமார் 20 அடி உயர்ந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிற நிலையில் மேட்டூர் அணை வரலாற்றில் 42 ஆவது முறையாக அணை நிரம்ப இருக்கிறது.