ADVERTISEMENT

மேட்டூர் அணை திறப்பு! 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்!!

02:50 PM Aug 13, 2019 | kalaimohan

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இன்று (ஆக. 8) தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். இதன்மூலம் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் மற்றும் கேரளாவில் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், இரு மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளும் நிரம்பி உள்ளன. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையின் முழு நீர்த்தேக்க அளவான 124.80 அடி உயரத்தை எட்டி நிரம்பியது. இதையடுத்து, கேஆர்எஸ் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 4200 கன அடி வீதம் வரும் தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


அதேபோல், கடல் மட்டத்தில் இருந்து 2284.80 அடி உயரத்தில் உள்ள கபினி அணையும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அந்த அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் இரு முக்கிய அணைகளில் இருந்தும் 2 லட்சத்து 39200 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று இரவு (ஆக. 12) 2.40 லட்சம் கன அடியாக அதிகரித்தது. தொடர் நீர் வரத்து காரணமாக கடந்த 9ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 54 அடியாக இருந்த நிலையில், நான்கு நாள்களில் மட்டும் மேலும் 40 அடி உயர்ந்தது. நீர் வரத்து அதிகரித்து வருவதால், விரைவில் அணையின் முழு நீர்த்தேக்க அளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்று, ஆகஸ்ட் 13ம் தேதியன்று (இன்று) மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்தது. முன்னதாக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேட்டூர் அணையில் சிறப்பு பூஜைகள் செய்ததுடன், தண்ணீரில் மலர்களைத் தூவியும் வழிபட்டனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100.03 அடியை எட்டியது. அணையின் முழு நீர் கொள்ளளவு 93.47 டிஎம்சி. தற்போதைய நீர் இருப்பு 63.144 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு தற்போது 2 லட்சத்து 58582 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசன வசதிக்காக முதல்கட்டமாக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறப்பின் மூலம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


மேட்டூர் அணை கட்டியதில் இருந்து இதுவரை 65வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில், மேட்டூர் அணையைத் திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பேசியது:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. விரைவில் அணையின் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கிறேன். ஏழுமலையான், ஜெயலலிதா ஆகியோரின் அருளாசியுடன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை திறப்பின் மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 137 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அவற்றின் மூலம் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான நேரத்தில் அவை வழங்கப்படும். மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 85 ஆண்டுகள் ஆன நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை ஏற்கனவே துவக்கி வைத்தேன். இதன்மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 2.70 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் எடுத்து பயன் அடைந்துள்ளனர்.

காவிரி - கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரப்பப்படும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT