ADVERTISEMENT

16 கண் மதகு திறக்க வாய்ப்பு... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

07:17 PM Sep 06, 2019 | kalaimohan

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கேஎஸ்ஆர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 75,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 50,000 கன அடியாக இருந்து வந்த நிலையில் தற்போது 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 118 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 86.679 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. தற்போது அதிகரித்துள்ள நீர்வரத்தால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளதால் 16 கண் மதகு வழியே உபரி நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் காவிரிக் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பெரம்பலூர் உட்பட 12 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தமுறை மேட்டூர் அணை நிரம்பினால் இதுவரை 40 வது முறையாக மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியதாக பதிவாகும். இன்று இரவு 9 மணிக்கு 16 கண் மதகு வழியே 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT