இதுகுறித்து, ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியது...
எந்த ஒரு தொகுதியிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்க முடியாது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 24 வார்டுகள் மக்கள் தொகையைவிட அதிகமான வாக்காளர் எண்ணிக்கையை கொண்டுள்ளது. மதுரை மத்திய தொகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட 16 வார்டுகளில் ஒன்பதில் மக்கள் தொகையைவிட வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எந்த ஒரு வார்டும் சட்டமன்ற தொகுதி எல்லைகள் மற்றும் இயற்கையான எல்லைகளைக் கடந்து அமைந்து இருக்க கூடாது எனத் தமிழ்நாடு நகராட்சி அமைப்புகள் விதிகள் எண் 7 தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது நடைபெற்றுள்ள வார்டு மறுவரையறையில், குறிப்பாகப் பல புதிய வார்டுகள் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கிடையே பரவி அமைந்திருப்பது மேற்கூறப்பட்டுள்ள சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும்.
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50% வார்டுகளும் எந்த வார்டுகளிலெல்லாம் பெண்களின் விகிதம் அதிகமாக உள்ளதோ அதை பொறுத்தே வழங்கப்பட வேண்டும். 34 இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் அவர்களின் எண்ணிக்கை விகிதத்துக்கு பொருந்தாமல் அமைந்துள்ளது. பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 17 வார்டுகள் பொது வார்டு என தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல பொதுவாக வகைப்படுத்த வேண்டிய 17 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் செல்லூர் ராஜுவின் தொகுதியான மதுரை மேற்குத் தொகுதியில் உள்ள 55 சதவீத வார்டுகள் சராசரி வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. மறுவரையறை செய்யப்பட்டதில் உள்ள முரண்பாடுகளையும் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதையும், சட்ட விதிமுறைகளை சரியாகப் பின்பற்றி மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது என்றார்.