ADVERTISEMENT

“அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது” - நடிகர் அர்ஜுன் பெருமிதம்!

10:12 AM Jul 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனுபவம் வாய்ந்த நடிகரும் தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று (02.07.2021) சிறப்பாக நடைபெற்றது. இதனைப் பற்றி நடிகர் அர்ஜுன் கூறுகையில், “இந்தக் கோவில் என்னுடைய 17 வருடக் கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதைவிட, அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும், பலரது ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலைச் செய்யத் தூண்டுதலாக இருந்தது. இருப்பினும் இந்தக் கோவிலை நான் கட்டினேன் என்பதைவிட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்தச் செயலை செய்யத் தூண்டியது என்பதுதான் உண்மை. ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இதுதான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளன.

பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்தக் கோவிலைப் பிரதிஷ்டை செய்துகொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக, பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்தக் கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்குச் சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோயிலைப் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள், தன்னுடன் அயோத்தி மண்ணை எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்தக் கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

விரைவில் இந்தக் கோவில் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது. இந்தக் கரோனாவால் பலரும் அவதிப்பட்டுவரும் நிலையில், கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்களுக்கு அவசியம். கடவுளின் அருள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT