இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி இன்று தீர்ப்பளித்தது.
இதனை அரசியல்கட்சிகள் வரவேற்றுள்ளன. தீர்ப்புக் குறித்து பேசிய ஜெ.அன்பழகன், "குட்கா ஊழலில் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை கோரினேன். கோரிக்கை நியாயமானது என நினைத்து உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது" என்கிறார்.
இந்தநிலையில், குட்கா ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரின் பதவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் பதவி விலக வேண்டும் என்கிறார் மு.க.ஸ்டாலின். சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டிருந்த சமயத்தில், சென்னை கலைவானர் அலுவலகத்தில், சுகாதாரத்துறையில் தேர்வுச்செய்யப்பட்டிருந்த மருந்தாளுநர்களுக்கு பணியாணை வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடியுடன் கலந்துகொண்டிருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். தீர்ப்பின் விபரம் அவரிடம் தெரிவிக்கப்பட்டவுடன், மூடு அவுட் ஆகியிருக்கிறார் விஜயபாஸ்கர்.
இந்த நிலையில், விழா முடிந்ததும் கோட்டைக்கு கிளம்பிய முதல்வர் எடப்பாடி, மூத்த அமைச்சர்களிடம் தீர்ப்பு குறித்து ஆலோசித்திருக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அரசு பதவியில் நீடிப்பது சட்டநெறிகளுக்கு முரணானது என்கிற நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரனின் பதவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.