Skip to main content

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு..200க்கும் மேற்பட்டோர் கைது!!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

தமிழ்நாட்டில் பவர்கிரீட் என்ற நிறுவனம்13 மாவட்டங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களை அமைக்க கூடாது என பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

farmers protest in erode



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் 13 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி பெருந்துறை துணை போலீஸ் சூப்பரிண்டன்ட் ராஜாகுமார் தலைமையில் அறச்சலூர், கொடுமுடி, மலையம்பாளையம், பங்களாபுதூர், கடத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதியம் 12 மணியளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி தலைமையில் விவசாயிகள் திரண்டு வந்து பஸ் நிலையம் முன்பு ரோட்டில் நின்று கொண்டு விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சாலை மறியல் செய்ய ரோட்டில் அமர்ந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், ஏ.ஐ.டி.யு.சியின் மாநில பொது செயலாளர் எஸ்.சின்னுசாமி மற்றும் சா.மெய்யப்பன், செல்வம் (தி.மு.க), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  13 பெண்கள் உட்பட 74 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
 

farmers protest in erode



அதே போல் நேற்று காலை பவானியில் அந்தியூர் பிரிவில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது ஒருங்கிணைப்பாளர் கே.எம் முனுசாமி போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, கொ.ம.தே.க கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர். பவானி அந்தியூர் பிரிவில் 86 க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பவானி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மொடக்குறிச்சி பகுதியிலும் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வடிவேலு மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் "பறிக்காதே பறிக்காதே நில உரிமையை பறிக்காதே" என்று கோஷமிட்டனர். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் அவர்களை கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.