Skip to main content

அனாதைப் பிணமாகக் கிடந்த டாக்டர்... அப்போலோவின் அத்துமீறிய செயல்... ஆம்புலன்ஸால் பயந்து ஓடிய மக்கள்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


நீண்ட ஊரடங்குக்கு முன்னோட்டமாக ஒரு நாள் ஊரடங்கை அறிவித்த இந்தியப் பிரதமர் மோடி, கரோனா தொற்றுக்கு எதிராகத் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் போராடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவாகக் கைதட்டச் சொன்ன போது நாடே ஒன்றிணைந்து கையை மட்டுமின்றி தட்டு, வாத்தியங்களையும் தட்டி தமது அமோக ஆதரவை வெளிப்படுத்தியது. ஆனால், யதார்த்தத்தில் கரோனா தொற்றால் இறந்த மருத்துவர் ஒருவரின் சடலத்தைத் தனியார் மருத்துவமனையும், மயான ஊழியர்களும், மக்களும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வெளிச்சமிட்டிருக்கிறது அந்தக் கொடூர நிகழ்வு.

 

 

 

incident



ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான எலும்புசிகிச்சை தொடர்பான மருத்துவர், தனியாக கிளினிக் வைத்து நடத்திவந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என அளவான குடும்பம். அவரிடம் பணிபுரியும் டிரைவர் ஆகியோருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை மோசமாக ஆனநிலையில் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 13-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். மருத்துவர் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு விஷயம் தெரிவிக்கப்பட, மருத்துவரின் உடலை சென்னையிலேயே தகனம் செய்துவிடும்படி கூறியுள்ளனர். கரோனா தொற்றால் மரணமடைவோரின் உடலை என்ன செய்ய வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதலை தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தவரின் சிகிச்சை விவரங்களையே மறைப்பதில் கைதேர்ந்த அப்போலோ நிர்வாகம், கரோனாவால் இறந்த டாக்டரின் உடலைக் கையாள்வதிலும் விதிகளை மதிக்கவில்லை.

 

incident



அப்போலோ ஊழியர்கள், மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய அம்பத்தூரில் உள்ள மின்மயானத்திற்கு உரிய தகவல் தராமல் கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த உடலைப் பார்த்ததும் மயான ஊழியர்கள் மிரண்டுவிட்டனர். தங்களுக்குப் போதுமான கரோனா பாதுகாப்பு கவச உடைகள் இல்லை என்பதால், மருத்துவரின் உடலை எரிக்க மறுத்துள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்கான உடைகளை அப்போலோ நிர்வாகம் கொடுத்தனுப்பியிருந்தால், உடனடியாக தகனம் செய்திருக்கலாம். அதன்பின், திருவேற்காட்டிற்கு கொண்டு சென்றனர் ஆம்புலன்ஸ் பணியாளர்கள். அங்கும் அனுமதியில்லாததால் மீண்டும் அம்பத்தூர் மயானத்திற்கு வந்தனர்.

 

http://onelink.to/nknapp


அப்போது அம்பத்தூர் பகுதி மக்களும் திரண்டு வந்து, இறந்த டாக்டரின் உடலைத் தகனம்செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனைக்கு ஊழியர்கள் அங்குள்ள நிலையைத் தெரிவித்தும் அலட்சியமே வெளிப்பட்டதால், டாக்டரின் உடலை அங்கேயே அப்படியே போட்டுவிட்டுச் சென்றது அப்போலோ அம்புலன்ஸ். இது அம்பத்தூர் மக்களை மேலும் டென்ஷனாக்கியதால், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தகவலறிந்து அம்பத்தூர் காவல்நிலைய போலீசார் அங்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், நோய்த்தொற்று பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போலா நிர்வாகமே இப்படி உடலைப் போட்டுவிட்டுப் போகிறதென்றால், எங்களுக்கு என்ன பாதுகாப்பு எனக் கேள்வி எழுப்பினர். மருத்துவமனை நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவரின் உடல் மீண்டும் அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிணவறையிலேயே வைக்கப்பட்டது.



 

hospital



இது குறித்து, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்வது பற்றி அரசு ஊழியர்களுக்கு எல்லாமே தெரியும். அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கும் உரிய வழி காட்டு நெறிமுறைகள் கொடுத்திருக்கிறோம். அரசாங்கத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தது இல்லை. தனியார் மருத்துவமனையில் உரிய தகவல் தெரிவிக்காமல் அவசரமாகப் போயுள்ளனர். தலைமைச் செயலாளர் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும், கலெக்டர்களுக்கும் ஏற்கனவே இதுபோன்று வந்தால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆக, தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழையும், பொதுமக்களின் அறியாமையால் ஏற்பட்ட அச்சமுமே இதற்குக் காரணமாகும். இனி அதுபோல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



ஆள் இல்லாத நேரத்தில், டாக்டரின் உடலை மீண்டும் கொண்டு வந்து எரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் நள்ளிரவிலும் அம்பத்தூர் பகுதி மக்கள் மின்மயானத்திலேயே காவலுக்கு இருந்தனர். இதையடுத்து ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலையில் போரூரில் உள்ள எரிவாயு மயானத்தில் ஆந்திரா டாக்டரின் உடல் எரியூட்டப்பட்டது.

மாநிலத் தலைநகரும் படித்த மக்கள் நிறைந்ததாகச் சொல்லப்படும் சென்னையிலேயே கரோனா அச்சம் இந்த அளவு நிலவுவதும், பிரபலங்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் அப்போலோ நிர்வாகம், ஒரு மருத்துவரின் உடலை கரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசர அவசரமாக மயானத்திற்கு கொண்டு சென்று, மக்கள் எதிர்ப்பினால் அப்படியே போட்டுவிட்டு ஓடியதும் இங்கே மருத்துவ அறமும் மனிதாபிமானமும் மிகக் கொடூரமான வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையே காட்டுகிறது.
 

க.சுப்பிரமணி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.