ADVERTISEMENT

'அ.தி.மு.க.வில் சேரச் சொல்லி மிரட்டுகிறார் அமைச்சர் செங்கோட்டையன்' - கம்யூனிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு!!!

10:46 AM Jun 09, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியது அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பில் உள்ள பள்ளிக் கல்வித்துறை. இந்த நிலையில் அவர் தனது தொகுதியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என நேரடியாக மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT


8 ஆம் தேதி காலை திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. திருப்பூர் சுப்பராயன் கோபிசெட்டிபாளையம் வந்திருந்தார். தொடர்ந்து அவர் குள்ளம்பாளையம் ஊராட்சியில் உள்ள நாதிபாளையம் என்ற இடத்தில் 200 மீட்டர் நீளத்திற்குத் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்து அங்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.-வும் அமைச்சருமான செங்கோட்டையன் அமைச்சருக்குறிய தகுதியில் அவர் நடந்து கொள்வதில்லை. இந்தத் தொகுதியில்தான் ஏராளமான கிராவல் மண் ஆளும் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. அதேபோல் இங்கு உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை உயர்த்துவோம் எனக் கூறுகிறார்கள். அணையின் உயரத்தை உயர்த்துவதை விட அணையில் உள்ள சேற்றை வெளியே எடுத்தால் போதும் அணையின் ஆழம் அதிகமாகும். இதையெல்லாம் செங்கோட்டையன் எதையும் செய்யாமல், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இணையச் சொல்லி இப்போது மிரட்ட ஆரம்பித்துள்ளார்.


தி.மு.க.வை சேர்ந்த சில தொழிலதிபர்களை நேரடியாக அ.தி.மு.க.வுக்கு வரவேண்டுமென செங்கோட்டையன் மிரட்டியிருக்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு அமைச்சராக இருப்பவர் மக்களுக்குப் பொதுவானவராக இருக்க வேண்டும் அதை விடுத்து விட்டு இப்படிக் கட்சியில் இணையச் சொல்லி மிரட்டுவது எல்லாம் நாகரீகமான செயல் அல்ல. அதே போல் இந்தத் தொகுதியில் ஆளுங்கட்சியினர் தலையிட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நடைபெறாமல் தடைப்பட்டால், நான் நேரடியாக வந்து போராட்டம் செய்வேன்." என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வுக்கு ஆள் பிடிக்கிறார் அதுவும் தி.மு.க.வை சேர்ந்தவர்களை மிரட்டி கூப்பிடுகிறார் எனக் கம்யூனிஸ்ட் எம்.பி. திருப்பூர் சுப்பராயன் குற்றச்சாட்டு வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT