Skip to main content

இப்படி செய்யாதீங்க... அமைச்சரால் இப்போது நிம்மதி... அமித்ஷாவின் அறிவிப்பு... கடுமையாக எச்சரித்த அன்புமணி! 

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை அதிமுக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருந்த நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதை அப்படியே சட்டப்பேரவையில் பதிவு செய்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. மக்களிடம் ஒரு அச்சத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அமைச்சர்கள் சிறைக்கு செல்வீர்கள் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாக திமுகவினர் பேசி வருவதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.   

இந்த நிலையில்,  இதுகுறித்து  பாமகவின் ராஜ்யசபா எம்.பி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்குவது குறித்து மத்திய அரசிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இதுவரை எந்த விளக்கமும் வராத நிலையில், தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், என்பிஆர் கணக்கெடுப்பின்போது சந்தேகத்துக்கிடமானோர் என்று எவரும் குறிப்பிடப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இவை இரண்டும் சரியான நடவடிக்கைகள் ஆகும்.

 

admk



தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் வழக்கம் கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கியது. அதன்பின் 2015-ம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு மேம்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் தேசிய மக்கள்தொகை பதிவேடு மீண்டும் தயாரிக்கப்படவிருக்கிறது. ஆனால், 2010-ம் ஆண்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பின்போது மக்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளை விட இப்போது கூடுதலாக 6 கேள்விகள் எழுப்பப்படவுள்ளன. பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை குறித்த 6 கேள்விகள் மக்களிடையே அச்சத்தை விதைத்துள்ளன. இந்தக் கேள்விகளை நீக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். இதை வலியுறுத்தி அண்மையில் நடந்த பாமகவின் இரு பொதுக்குழு கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

pmk



சர்ச்சைக்குரிய 6 கேள்விகளையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள போதிலும், அதற்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் சர்ச்சைக்குரிய கேள்விகளுடன் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான பணிகளைத் தொடங்கினால், முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் அச்சம் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் மக்கள்தொகை பதிவேடு தயாரிப்புக்கான கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு தற்காலிக நிம்மதியை அளிக்கக்கூடும்.


அடுத்தகட்டமாக, மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து என்பிஆர் கணக்கெடுப்பில் சர்ச்சைக்குரிய கேள்விகளை முழுமையாக நீக்கவும், அதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் அச்சத்தை முழுமையாகப் போக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

 

 

dmk

மற்றொருபுறம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்திய முஸ்லிம் எவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த விளக்கத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்கான சர்ச்சைக்குரிய கேள்விகள் பற்றி விளக்கமளித்த அவர், என்பிஆர் கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகளில், அனைத்துக்கும் விடையளிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; தெரிந்த தகவல்களை மட்டும் அளித்தால் போதுமானது; எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை; தகவல்களைத் தராதவர்கள் சந்தேகத்துக்கிடமானவர்கள் என்று குறிப்பிட மாட்டார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.


தேசிய மக்கள்தொகை பதிவெடு தயாரிப்பு குறித்து எந்தவிதமான அச்சமும் தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்படும்; அவற்றுக்கு விடை அளிக்காவிட்டால் சந்தேகத்துக்கு இடமானவர்களாக அறிவிக்கப்பட்டு, குடியுரிமை பறிக்கப்படும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு பொய்யான பரப்புரை செய்து வந்தன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்திற்குப் பிறகு பொய்யான பரப்புரைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இனியும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்பிஆர் பற்றி தேவையற்ற, பொய்யான தகவல்களைக் கூறி மக்களை அச்சுறுத்தும் செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.