ADVERTISEMENT

தருமபுரி மாணவி உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைப்பு!!

08:10 PM Nov 12, 2018 | kalaimohan

தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை- மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

ADVERTISEMENT

கடந்த 6ம் தேதி, அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்,சதீஷ் என்ற இரண்டு அயோக்கியர்கள் சவுமியாவை பாலியல் கொடுமை செய்துள்ளனர். தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் புகாரை பெற மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகே இரவு 12 மணிக்கு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் இரண்டு தினங்கள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இரண்டு தினங்கள் கழித்து மிகக் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சவுமியாவை தரும்புரி மருத்துவமனைக்கு காவலர்கள் துணையின்றி அனுப்பியுள்ளனர். சாதாரண பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சவுமியா உயிரிழந்தார்.

உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டு சவுமியாவை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யும் வரை சடலத்தை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போராடினர்.

இந்த பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஸ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ் சரணடைந்த நிலையில். உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது. இன்று மாலை பிரேத பரிசோதனை தொடங்கிய நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT