ADVERTISEMENT

வடமாநில பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை தண்டனை...!

02:14 PM Jan 14, 2020 | Anonymous (not verified)

கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், உதவியாக இருந்த ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


டெல்லியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு கும்பகோணத்தில் உள்ள சிட்டியூனியன் வங்கியில் வேலை கிடைத்தது. அதற்காக டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்தவர் ,அங்கிருந்து கடந்த 2018 டிச.1ஆம் தேதி இரவு திருச்செந்தூர் விரைவு ரயிலில் கும்பகோணம் வந்து இறங்கினார். கும்பகோணத்திற்கு முதன்முறையாகவும், இரவு நேரத்தில் வந்ததால் அந்த இளம்பெண்ணுக்கு சக நண்பர்கள் கூறிய திசைகள் தெரியாமல் அங்கும் இங்குமாக நடந்தார். லேசான மழையும் தூரியதால் திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல் நின்றவர், நள்ளிரவு 11 மணியானதால் தங்குவதற்கு திட்டமிட்ட அறைக்கு செல்வதற்கு ஆட்டோ இல்லாததால் ரயில்நிலையத்தை விட்டு காமராஜர் சாலைக்கு வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை கை காட்டி நிறுத்த, அந்த ஆட்டோ ஓட்டநரும் நிறுத்தி அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டார். அந்த பெண் ஆங்கிலத்தில் தான் செல்ல வேண்டிய தெருவுக்கான முகவரியை சொல்லியுள்ளார். ஆட்டோ ஓட்டுநருக்கு மொழிபுரியாமல் அந்த பெண்ணை பைபாஸ் பகுதியில் இருக்கும் விடுதிகள் பக்கம் அழைத்துச் சென்றுள்ளார்.

செல்போன் மூலம் ஆட்டோ டிரைவர் திசைமாறி செல்வதை தெரிந்துகொண்டவர், எங்கே திசை மாறி செல்கிறீர்களா என மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டபடியே, தன்னுடைய சக நண்பருக்கு போன் செய்துள்ளார். இதனால் பயந்துபோன ஆட்டோ ஓட்டுனரோ அந்த பெண்ணை நள்ளிரவு என்றுகூட பார்க்காமல் அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன்பிறகு அந்த பெண் தன்னுடைய டிராலி பேக்கை ரோட்டில் இழுத்துக்கொண்டு செட்டிமண்டபத்திலிருந்து சாலையிலே நடந்து வந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவனிடம் லிப்ட் கேட்டுள்ளார். அந்த இளைஞனோ அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, சக நண்பர்களுக்கு தகவல்கொடுக்க அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து வந்துள்ளனர். நாச்சியார்கோயில் பைபாஸ் ரோட்டுக்கு சென்ற இளைஞர்கள் அந்த பெண்ணை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதியில் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.



நான்கு இளைஞர்கள் அந்த பெண்ணின் வாயில் துணியைவைத்து அடைத்துவிட்டு சத்தமே இல்லாமல் கொடூரமாக அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதன்பிறகு அந்த பெண்ணை நான்கு இளைஞர்களில் ஒருவன் அழைத்துக்கொண்டு நாச்சியார்கோயில் மெயின்ரோட்டுக்கு வந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணையும் ஏற்றிவிட்டு, அதில் இளைஞன் ஒருவனும் ஏறிக்கொண்டனர். ஆட்டோவில் வரும்போது, ஆட்டோ ஓட்டுநரிடம் தான் செல்போனை மறந்து வைத்துவிட்டதாக கூறி ஆட்டோ ஓட்டுநரின் செல்போனை வாங்கி அந்த செல்போனில் இருந்து சக நண்பர்களிடம் பேசி, அந்த பெண்ணை கும்பகோணத்தில் விட்டுவிட்டு வருகிறேன், நீங்கள் மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு பஸ்டாண்டுக்கு வந்துவிடுங்கள் என கூறியுள்ளான்.

கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே வந்தபோது ஆட்டோவிலிருந்து அந்த இளைஞர் இறங்கிகொண்டான். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை 60 அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார். இறங்கும் போது அந்தபெண் ஆட்டோவின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டார். பின்னர் விடுதியின் அறைக்கு சென்றதும் அந்த பெண்ணிற்கு உடல் நிலை முடியாமல் போனது. மறுநாள் தன்னுடைய தோழிகளிடம் நடந்த கொடுமையான சம்பவங்களை கூறினார். அதன்பிறகே தகவல் வெளியே பரவியது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்துக்கும் சம்பவம் தெரியவந்தது. அதன் பிறகு டெல்லியில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிந்து அவர்களும் கும்பகோணம் வந்துவிட்டனர்.



சிட்டி யூனியன் வங்கி நிர்வாகம் போலீஸாரிடம் இந்த சம்பவத்தை ரகசியமாக விசாரிக்குமாறு கேட்டுகொண்டதன் பேரில், அந்த இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, தான் குறித்து வைத்திருந்த ஆட்டோவின் பதிவு எண்ணை மட்டுமே கூறினார். அதன்பிறகு தாராசுரத்தைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநரை தூக்கிவந்து விசாரித்தனர் காவல்துறையினர், அந்த டிரைவரோ தன்னிடம் செல்போனை வாங்கி ஆட்டோவில் வந்த இளைஞன் பேசியதை கூறியதும், அந்த செல்போன் யாருக்கு சென்றது என்பதை வைத்து போலீஸார் துப்பு துலங்கியதில், டெல்லி பெண்ணை பாலியல் கொடுமைசெய்தது கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ் (26), மோதிலால் தெருவைச் சேர்ந்த மூர்த்தி மகன் வசந்த்குமார் (23), மூப்பனார் நகர் சிவாஜி மகன் புருஷோத்தமன் (21), ஹலிமா நகர் சுந்தர்ராஜன் மகன் அன்பரசன் (21) ஆகிய நான்குபேர் என்பதை கண்டறிந்து அவர்களை தூக்கிவந்து விசாரித்தனர்.

அதோடு நடுரோட்டில் இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் குருமூர்த்தி (26) என்பதை கண்டுபிடித்து ஐந்து பேரையும் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் கைது செய்தார். இந்த வழக்கு தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அரசு தரப்பு சாட்சியாக 33 பேர் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கை விசாரித்து, அரசு தரப்பு சாட்சியங்கள் சந்தேகம் இன்றி நிரூபணம் செய்யப்பட்டதால் 5 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார்.



குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நால்வருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், அதோடு நால்வருக்கும் தலா 65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கொடூர குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு கும்பகோணம், தஞ்சை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT