பீகாரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பப்புகுமார் (30) என்ற கோவை சூலூர் விமானப்படை ஊழியரை பாட்னா மகளிர் காவல்துறையினர் கோவையில் கைது செய்து பிகாருக்கு அழைத்து சென்றனர்.
பீஹார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த பப்புகுமார் என்பவர் கோவை சுலூர் விமானப்படை தளத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பீகாரில் தனது பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகி வந்துள்ளார். திருமணம் செய்ய வற்புறுத்தியபோது அதிகமான வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பப்புகுமார் கோவைக்கு பணி காரணமாக வந்துவிட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், பப்புகுமார் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாட்னா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பப்புகுமாரை கைது செய்ய நீதிமன்றத்தின் பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி குமாரி தலைமையில் 3 பேர் கொண்ட காவல்துறையினர் கோவைக்கு வந்தனர்.
பப்புகுமாரை கைது செய்த பீகார் மாநிலம் பாட்னா காவல்துறையினர், சட்ட வழக்குப்படி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் பப்புகுமாரை ஆஜர்ப்படுத்தினர். வரும் 27ஆம் தேதிக்குள் பப்புகுமாரை பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டதை அடுத்து, பப்புகுமாரை பாட்னா காவல்துறையினர் ரயில் மூலமாக பீகாருக்கு அழைத்து சென்றனர்.