Skip to main content

24 மடங்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டண உயர்வு! பட்டியல் இன மாணவர்கள் பாதிப்பு ! 

Published on 12/08/2019 | Edited on 12/08/2019


 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வெழுதும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ. 50-இல் இருந்து  ரூ.1,200 ஆக 24 மடங்கு உயர்த்தியுள்ளனர். 

 

 சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் 9-ஆம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும், அதேபோல பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வுக்கட்டண விவரங்களை சிபிஎஸ்இ அறிவித்தது.  ஏற்கெனவே சிபிஎஸ்இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் பதிவுகளை தொடங்கிவிட்ட நிலையில், இப்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணத்துக்குரிய வித்தியாசத்தை மாணவர்களிடம் இருந்து இனிமேல் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.

 

c


சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தின்படி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இனிமேல் 5 பாடங்களுக்கு ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும்,  இதற்கு முன் அவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தினர். ஏறக்குறைய 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் 5 பாடங்களுக்குச் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பிளஸ் 2 வகுப்பு எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 5 பாடங்கள் தவிர கூடுதல் பாடத்துக்குக் கட்டணம் ஏதும் இதற்கு முன் செலுத்த தேவையில்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ.300 கட்டணமும், பொதுப்பிரிவினர் இதற்கு முன் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும் .


தேர்வு தொகையை இறுதி தேதிக்குள் செலுத்தாவிட்டால்  அவர்கள் பெயர் பதிவு செய்யப்படாது, 2019-20-ஆம் ஆண்டு தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தகங்களைப் பார்த்து எழுதும் தேர்வு; விரைவில் அமல்படுத்த திட்டம்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Plan to implement soon on open book examination

கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு. தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. 

பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின்படி, புதிய முயற்சிகளை அவ்வப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) எடுத்து வருகிறது. அந்த வகையில் சி.பி.எஸ்.இ, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதும் முறையை நடைமுறைப்படுத்த சி.பி.எஸ்.இ தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்கள் கணிதம்,அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களில் சோதனை முறையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத சி.பி.எஸ்.இ ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

Next Story

இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள்; மத்திய அமைச்சகம் அறிவிப்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Union Minister announced From now on, public examinations will be held twice a year

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 2025 - 2026ஆம் கல்வியாண்டுகளில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காகவும் தேசியக் கல்வி கொள்கையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 படிக்கும் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்த தேர்வை மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது. மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.