நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 20- ஆம் தேதி நடைபெறும் என ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் தங்களின் வாக்களிக்கும் உரிமைப் பாதிக்கப்பட்டதாக ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள், இறுதித் தீர்ப்பு வரும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணத் தடை விதித்தனர். இதனால் தேர்தல் நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், பதிவான வாக்குச் சீட்டுகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்தினார். சுமார் இரண்டரை ஆண்டுகள் நடைபெற்று வந்த இவ்வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23- ஆம் தேதி அன்று உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம், மூன்று வார காலத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு பள்ளியில் வாக்கு எண்ணிக்கைக்காகத் தேர்வு செய்யப்பட்டு, வரும் மார்ச் 20- ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.