Skip to main content

தோழர் முத்துக்குமரன் நினைவு நாள்: ரத்த தானம் கொடுத்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய இளைஞர்கள்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019


 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் எஸ்.பி.முத்துக்குமரன். 2011 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். சுட்டமன்றத்தில் குறைந்த நாட்களில் அதிகமான கேள்விகளை சுருக்கமாக கேட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற பாராட்டுகளை பெற்றவர். ஒரு வருடத்தில் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது மரணம் அனைத்துக் கட்சி தலைவர்களையும் கண் கலங்க வைத்தது. பல்வேறு கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது தொகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த சாதாரண மக்களும் கதறி அழுதனர். அதன் பிறகு நெடுவாசல் மட்டுமின்றி பல கிராமங்களிலும் அவர் பெயரில் மன்றங்கள், அறக்கட்டளைகள் ஏற்படுத்தி இளைஞர்கள் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Blood donation


 

    நெடுவாசலில் உருவாக்கப்பட்டுள்ள எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் புயலில் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்ததுடன் வீட்டுக்கு வீடு தென்னை மற்றும் பல்வேறு மரக்கன்றுகளை வழங்கினார்கள். மா.சுப்பிரமணியன் நடத்தும் சைதை பசுமை இயக்கத்தில் இவர்கள் கேட்டுக் கொண்டதால் தென்னை மற்றும் மா கன்றுகளை நெடுவாசல் சுற்றுவட்டார கிராம விவசாயிகளுக்கு வழங்கினார்கள். 

 

    ஏப்ரல் முதல் நாள் முத்துக்குமரன் நினைவு நாள் என்பதால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் விபத்து நடந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். 

 

Blood donation


 

 நெடுவாசல் கடைவீதியில் உள்ள முத்துக்குமரன் நினைவு விழா பொது மேடையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கிராமத்தில் இருந்து ஆண்களும், பெண்களும் ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர். அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ரத்தம் பெற்று சென்றனர். ரத்ததானம் கொடுத்த இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிலவேம்பு கசாயம், நீர்மோர், வழங்கப்பட்டதுடன் பிரமாண்டமான அன்னதாமும் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முத்துக்குமரன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். 
 

    இதே போல எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் மக்கள் நலப்பணிகள் தொடந்து வழங்கப்படும் என்றனர் விழாக்குழுவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.