ADVERTISEMENT

போதை ஊசி செலுத்தி பிறந்தநாள் கொண்டாட்டம்; சென்னை போலீசாருக்கு அலெர்ட் கொடுத்த மாணவனின் உயிரிழப்பு

05:21 PM Nov 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நூதனமான முறையில் பட்டாக்கத்திகளில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது, நடு சாலையில் போக்குவரத்தை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். இந்நிலையில், போதை ஊசிகள் போட்டுக்கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய சம்பவமும் அதில் ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ராகுல் என்ற 19 வயது இளைஞர். இவர் செங்கல்ராயன் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார். அண்ணா சாலையில் இருக்கக்கூடிய விடுதி ஒன்றில் தங்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், காலையில் எழுந்த ராகுல் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக நண்பர்கள் அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த உயிரிழப்பு மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது போதைப்பொருள் பவுடரை ஊசி மூலமாக செலுத்திக் கொண்டது தெரிய வந்தது. அதிகப்படியான போதை ஊசி போட்டுக் கொண்டதால் வலிப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. ஏற்கனவே நவம்பர் 15ஆம் தேதி சதீஷ் என்ற இளைஞர் இதேபோன்று போதை ஊசி செலுத்திக் கொண்டதில் உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் பவுடர் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT