சென்னை பிராட்வேயில் இருந்து சென்ற அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் 'ரூட்டு தல' என பாடல் பாடிக் கொண்டு தொங்கியபடி பயணித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, முந்தைய காலங்களில் 'பஸ் டே' 'காலேஜ் டே' எனக் கல்லூரி மாணவர்கள் சிலர் இதேபோல் அரசுப் பேருந்து மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், சென்னை பிராட்வேயில் இருந்து நந்தனம், கிண்டி, பல்லாவரம், பம்மல் வழியாக அனகாபுத்தூர் செல்லும் 60 ஏ என்ற அரசு மாநகரப் பேருந்தில், நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளை பிடித்துத் தொங்கிக் கொண்டும், ஆபத்தான முறையில் பயணம் செய்ததோடு ரகளையிலும் ஈடுபட்டனர்.
மாணவர்கள் அதிகமாகப் பேருந்தின் படிக்கட்டு பகுதியில் தொங்கியபடி சென்றதால், பேருந்து ஒரு புறம் சாய்ந்திருந்தது. 'நாங்கள்தான் ரூட்டு தல' எனக் கூச்சலிட்டுக் கொண்டு, மாணவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு செல்லும் அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னரே போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.