ADVERTISEMENT

கதவ திறங்க..... வீட்டிற்குல் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டித் தள்ளிய கும்பல்

02:30 PM Feb 01, 2024 | ArunPrakash

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது கல்லுவழி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. 40 வயதான பாரி கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி அரசி, இவருக்கு 38 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு ஜெர்லின் என்ற 14 வயது மகளும், ஜோபின் என்ற 10 வயது மகனும் உள்ளனர். வெளி நாட்டு வேலையில் பிசியாக இருந்து வரும் ஜேக்கப் பாரி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் வெளி நாட்டுக்கு சென்று விடுவார். இவரின் தந்தை சின்னப்பன். இவருக்கு 67 வயதாகிறது. இவரின் மனைவி உபகாரமேரி இவருக்கு 65 வயது ஆகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஜேக்கப் பாரியின் குடும்பத்தில் உள்ள 5 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல தங்களது வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென அதிகாலை 3 மணியளவில் யாரோ வீட்டை தட்டியதாக சொல்லப்படுகிறது. அதிகாலை நேர்த்தில் யாராக இருக்குமென நினைத்த ஜேக்கப்பின் தந்தை, எழுந்து சென்று கதவை திற்துள்ளார். அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் கண் மூடித்தனமாக முதியவரை வெட்டியுள்ளது. உடனே முதியவர் சின்னப்பன் கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு அவரின் மனைவி மற்றும் மருமகள் பேரன் பேத்தி என அனைவரும் ஓடி வந்துள்ளனர். அப்போது, அடுத்தடுத்து ஓடி வந்த அனைவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேரும் வீட்டுக்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் மயக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மர்ம நபர்கள், வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

ADVERTISEMENT

பின்னர், சிறிது நேரம் கழித்து காலையில் சிறுவன் ஜோபின் கண் விழித்துள்ளான். அப்போது, தனது அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா என அனைவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனே, சம்பவம் குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்த அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் படுகாயங்களுடன் கிடந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடியே சிறிது தூரம் ஓடி சென்று நின்றுள்ளது. ஆனால், அந்தப் பகுதியில் உள்ள யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, இந்தக் கொடூர தாக்குதலால் கோபமடைந்த பொதுமக்கள், மதுரையிலிருந்து தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுவழி விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கொள்ளை கும்பல்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர், மறியலை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்து 5 பேரை சரமாரியாக வெட்டி விட்டு, கொள்ளயடித்த சம்பவம் காளையார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT