திருடுவதற்காக வீட்டு கதவை உடைக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கடைசிவரை வீட்டின் கதவை உடைக்க முடியாததால் திணறி கடைசியில் திருடவே வேண்டாம் என இடத்தை காலி செய்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சி லட்சுமி நகரில் வசிக்கும் ஸ்ரீநிவாஸன் என்பவர் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட இரண்டு இளைஞர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கலாம் என திட்டமிட்டு கவ்பார் எனப்படும் சிறிய கடப்பாறையை வைத்து வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் தொடர்ந்து வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தும் வீட்டின் கதவை உடைக்க முடியவில்லை. நீண்டநேரம் இருவரும் மாற்றி மாற்றி உடைக்க முயற்சித்தும் உடைக்க முடியாமல் திணறிய அந்த இரு இளைஞர்களும் கடைசியில் திருடும் முடிவையே கைவிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளனர்.
பல மணி நேரமாக இளைஞர்கள் இருவரும் பூட்டை உடைக்க போராடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி பதிவில் கொள்ளையர்கள் இருவரும் கதவை உடைக்க திணறிய அந்த காட்சிகள் காமெடி கொள்ளையை போல் சிரிப்பூட்டும் விதமாக இருந்தது. இதனடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த முகமது ஹம்ரோ என்ற இளைஞர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். மதுரவாயல் பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் கலைச்செல்வன் என்பது தெரியவந்து உள்ளது. இதில் கலைச்செல்வன் மீது ஏற்கனவே 5 கொள்ளை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.