கரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை வரும் 30ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரஜினி சார்பாக அறிக்கை வெளியானது. இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு ரஜினி வெளியிட்டதாக ஒரு கடிதம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதுதொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். அதில், "அந்த அறிக்கை தன்னால் வெளியிடப்படவில்லை. ஆனால் உடல்நலம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்த தகவல் உண்மைதான்" என விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து மன்றத்தினரிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளதாக தகவல் வெளியானது. அரசியல் தொடர்பாகவும், கட்சி ஆரம்பிக்கலாமா என்பது குறித்தும் அவர்களிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை வெளியிடவில்லை.