ADVERTISEMENT

வெளிநாட்டில் மர்மமாக இறந்துகிடந்த கணவர்... உடலை மீட்டுத்தரக் கோரி கதறும் மனைவி, குழந்தைகள்!

11:27 PM Aug 07, 2020 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள பெரியகோட்டுமுளை கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பெரியசாமி(40). இவருக்கு கடந்த15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி அம்சவல்லி(35) என்ற மனைவியும், பிரேம்குமார்(15), பிரதாப்(13) என்ற 2 மகன்களும் அனுஷியா(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். பெரியசாமி குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விசா எடுத்து துபாய்க்கு கட்டிட வேலைக்காக சென்றுள்ளார்.

அங்கிருந்தபடியே தினந்தோறும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வந்த இவரின் அலைபேசி கடந்த திங்கட்கிழமை முதல் 'சுவிட்ச் ஆஃப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அவர் எந்தச் சூழ்நிலையில் உள்ளார் எனத் தெரியாமல் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில் அவருடன் வேலை செய்து வந்த எடச்சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் 'உங்கள் கணவர் தங்கியிருந்த அறையில் உயிரிழந்துள்ளார். அவருடன் வேலை செய்த நண்பர்கள் அவரை வேலைக்காக அழைத்துச் செல்வதற்கு எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்துள்ளது' என்று அலைபேசி மூலம் அம்சவல்லியிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அந்தக் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் நேற்று கம்மாபுரம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குக் காவல்துறையினர், 'வட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியரிடம் மனு கொடுங்கள்' என்று கூறியுள்ளனர். இதையடுத்து அம்சவல்லி தனது மூன்று பிள்ளைகளுடன் நேற்று விருத்தாசலம் வட்டாட்சியர் செல்வமணியைச் சந்தித்து மனு அளித்தார்.

இந்நிலையில் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், 'எனது கணவர் சாவில் சந்தேகம் இருக்கிறது. அவர் பணியாற்றிய முதலாளியிடம் அலைபேசி செய்து கேட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சாவின் மர்மத்தைக் கண்டறிய வேண்டும். மேலும் அவரது உடலை விரைவில் எங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கண்காணா தூரத்தில் குடும்பத்திற்காக பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற கணவர் எந்த நிலையில் உள்ளார் என்று கூட தெரியாமல் அந்தக் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரைக் கண்கலங்க வைத்தது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT