ADVERTISEMENT

மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ரூ.550 கோடியில் புதிய திட்டம்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!!

12:25 AM Jul 23, 2019 | santhoshb@nakk…

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஏரிகளில் தேக்கி வைக்கும் வகையில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்தார். அரசு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, திங்கள்கிழமை (ஜூலை 22) ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது.

ADVERTISEMENT


மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 100 ஏரிகள், குளங்களில் நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இதற்காக 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, காவிரி & கோதாவரி நதிகள் இணைப்புத்திட்டம் நிறைவேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய பங்கீட்டின் படி நீர் முழுமையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் விரைவுச்சாலை அவசியமானது. கடந்த இருபது ஆண்டுகளாக பயன்பட்டு வந்த சாலையால் விபத்து அதிகரித்துள்ளது. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, நவீன முறையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன.


திமுக ஆட்சிக்காலத்தில் சாலை விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது அதற்குரிய இழப்பீட்டை கொடுக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அதிமுக ஆட்சியில் நில எடுப்புக்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு, மாநில வளர்ச்சி, விபத்தை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக மத்திய அரசின் புதிய அதிவிரைவுச்சாலைத் திட்டத்தை தமிழக அரசு வரவேற்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT