ADVERTISEMENT

“அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு நல்ல பெயரை பெற்றுதந்தோம்..” எடப்பாடி பழனிசாமி 

04:06 PM Apr 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT


தமிழ்நாடு அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதன்படி திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த ஆர்பாட்டத்தின் நோக்கம் மக்கள் இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த நேரத்தில் இந்த அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது. மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது.

இந்தியாவிலேயே அதிகமாக உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று நல்ல பெயரை அதிமுக ஆட்சியில் பெற்று தந்தோம். 52 லட்சம் மானவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினோம். ஏழை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய முயற்சி செய்கிறீர்கள். ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 30 ரூபாய் திமுகவிற்கு செல்கிறது. அப்படி என்றால் எவ்வளவு கோடி செல்லும் என எண்ணி பார்க்க வேண்டும்.

திமுக விளம்பரத்தால் இயங்கிவருகிறது. அதுமட்டுமில்லை என்றால் காணாமல் போய்விடும். 10 மாதத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள். நான் கொண்டு வந்த திட்டத்திற்கு எல்லாம் ரிப்பன் கட் பன்னிக் கொண்டிருக்கிறார்கள்.நாம் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகிறார்கள்.

ஊர் ஊராக சென்று திண்ணையில் படுதாவை போட்டு பெட்டியில் குறைகளை போடுங்கள் என்றும் அப்படி கோரிக்கை நிறைவேவில்லை என்றால் நேரில் வந்து பாருங்கள் என்றார். இது வரை எவ்வளவு பெயரை நீங்கள் சந்தித்து உள்ளீர்கள். சிறப்பு முகாமை ஏற்படுத்தி 9.45 லட்சம் மனுக்களை பெற்றோம். இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களுக்கு தீர்வு கண்டோம்.


திமுக கட்சி தொண்டர்கள் பணத்தில் ஏன் அரசு அதிகாரிகள் துபாய் செல்ல வேண்டும். துபாய் சர்வதேச கண்காட்சி 10வது மாதமே துவங்கி விட்டது. முடிய 6 நாள் இருக்க நம் முதல்வர் சென்று புதிய அரங்கை திறந்து வைக்கிறார். 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து துபாயில் முதலீடு செய்ய தான் ஸ்டாலின் சென்றார். மக்கள் இப்படியே கடந்து சென்று விடுவார்கள் என்று என்னி விடாதீர்கள். மிக பெரிய போராட்டத்தை மக்கள் நடத்த போகிறார்கள். இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன்.


கதவணை கட்ட நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் அதையும் கைவிட்டு விட்டீர்கள். என்னென்ன நல்ல திட்டங்களை எல்லாம் நாம் கொண்டு வந்துள்ளோமோ அதை எல்லாம் கை விட்டு விட்டீர்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, காவல் துறை செயல் இழந்துவிட்டது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வோம் என அறிவித்தார். கண்டிப்பாக இதனை தடை செய்ய வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனை எல்லாம் செய்யவில்லை என்றால் எதிர்காலமே திமுகவிற்கு இருக்காது.


திராவிட மாடல் இது தானா? அம்மா மினி கிளினீக் இப்போது மூடி விட்டார்கள். அம்மா என்கிற பெயரை கேட்டாலே ஸ்டாலினுக்கு அலர்ஜியாகி விடுகிறது. மின் வெட்டு இப்போது தான் ஆரமித்து உள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை என்கிறார். ஆட்சியில் இருப்பதே துன்பம் தான். பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து இருப்பதால் பக்கத்து மாநிலத்திற்கு சென்று தான் சரக்கு வாகனங்கள் டீசல் போடுகின்றனர். இதனால் நம் வரி வருவாய் எல்லாம் பக்கத்து மாநிலத்திற்கு செல்கிறது.


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டபேரவை தேர்தல் வந்தாலும் வரலாம் பிரதமரே கூறி உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT