ADVERTISEMENT

“அவர் சொல்வது குறித்து என்னிடம் கேட்காதீர்கள்”- சீமான் ஆவேசம்

12:14 AM Mar 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். அவர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஒரு சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு அதை செய்கிறார்கள். அந்த ஒரு சிலரும் வேறு யாரும் அல்ல. இருவர் தான். ஒன்று பாஜக ஆர்.எஸ்.எஸ். அவர்கள் மறைமுகமாக செய்கிறார்கள். சீமான் வெளிப்படையாக செய்கிறார். முதலமைச்சர் நேரடியாக அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தன் விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனையை தூண்டி விடும் அளவிற்கு செயல்படுகிறார். அவருடைய பல்வேறு உரைகள் அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு மோசமாக உள்ளன. பீகாரில் பாஜக பேசியது தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பிரச்சனைக்கு காரணம் இந்த ஊரில் சீமான் தான். 10 வருடமாக அவர் ஒரு விஷயத்தை பேசி வந்தால் அது நியாயமாகி விடுமா. ரயில்வே, வங்கிகளில் பணி புரிபவர்களது சூழல் வேறு. அதை நாம் எதிர்க்கிறோம். பாராளுமன்றம் வரை போய் அது குறித்து பேசியுள்ளோம். ஆனால் தொழிலாளர்கள் அப்படி அல்ல.” எனக் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்கையில், “அவர் சொல்வது குறித்தெல்லாம் என்னிடம் கேள்விகளே கேட்காதீர்கள். வடமாநிலத்தவர்கள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என ஆய்வு செய்ய குழு அனுப்பினார்கள். தமிழர்கள் மகாராஷ்டிராவில் 27 லட்சம் பேர் உள்ளோம். கர்நாடகத்தில் 1.15 கோடி பேர் வாழ்கின்றனர். அனைத்து மாநிலத்திலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். நீங்கள் இங்கிருந்து குழு அனுப்பி மற்ற மாநிலங்களில் உள்ள தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் என ஆய்வு செய்தீர்களா? வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். இம்மாதிரியான போலிச் செய்திகளை கிளப்பி விடுகிறார்கள். நாங்கள் தான் தூண்டுகிறோம் எனச் சொல்கிறார்கள். நாங்கள் எங்காவது அவர்களை தாக்கினோமா. தாக்கியது எல்லாம் அவர்கள் தான். ஓசூர் கல்லூரி உணவகத்தில் அவர்கள் தாக்கியதால் தான் நம் மாணவர்கள் தாக்கினார்கள். கரூர் பேருந்து நிலையத்தில் தாக்கியதும் அவர்கள் தான்” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT