ADVERTISEMENT

“ஆளுநர் ரவியா? ஆன்லைன் ரம்மியா?” - முத்தரசன்

05:52 PM Dec 29, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் மத்திய அரசு அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டது. இந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், தேசிய பொதுச் செயலாளர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் ரவி என்பவர் யாரென்பதே எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் நமக்குக் கிடையாது. ஆனாலும் இந்த மாநிலத்தின் ஆளுநர் அவர். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். சம்பளத்திற்காக நியமிக்கப்பட்டவர் அவர். அவருக்கு நமது வரிப்பணத்தைத்தான் மாநில அரசு சம்பளமாகக் கொடுக்கிறது. அவர் தங்கி இருக்கும் மாளிகைக்குத் தேவையான பணிகள் அனைத்தையும் மேற்கொள்வது மாநில அரசு. அவருக்கு உரியப் பாதுகாப்பை வழங்குவதும் தமிழக அரசுதான்.

இவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் எதற்கும் கையெழுத்துப் போடமாட்டேன் என அடம் பிடிக்கும் ஆளுநராக ரவி இங்கே இருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் தினசரி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கான பணத்தை இழக்கிறார்கள். கடன் தொல்லையால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய உத்தியோகங்களில் இருப்பவர்கள். படித்த பட்டதாரிகள். வெளியில் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது எனக்குத் தெரியாது.

சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அவசர சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். நிரந்தர தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. பல மாதங்களுக்குப் பிறகு அரசிடம் விளக்கம் கேட்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் அரசு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறது. அதன் பின் ஆளுநர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மாநிலத்தின் முதல்வரும் நேரில் சந்தித்து மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கேட்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆளுநர் உடனடியாக கையெழுத்துப் போடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.

அவர் யாரையும் மதிக்காமல் சூதாட்டத்தை நடத்துபவர்கள் 9 பேரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்துப் பேசுகிறார். இதற்கு என்ன காரணம். தமிழகத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து சாக வேண்டும். ஆளுநர் அவர்களுடன் உறவாக இருப்பார் என்றால் இந்தக் கள்ள உறவிற்கு என்ன பெயர். இந்தக் கள்ள உறவை ஆளுநர் மேற்கொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக மாநிலச் செயலாளர் முத்தரசன் பேரணியின்போது “ஆளுநர் ரவியா? ஆன்லைன் ரம்மியா?” என முழக்கமிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் மாளிகை முற்றுகை பேரணியில் ஈடுபட்ட 4000த்திற்கும் அதிகமானோர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பேருந்துகளில் ஏற்றிச் சென்று சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT