கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வரை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உலக வங்கி மூலம் கடன் பெற்று, 162 கோடி ரூபாயில், மாநில நெடுஞ்சாலை போடும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த காலம் முடிந்து 10 மாதங்கள் ஆகியும், நெடுஞ்சாலையில் உள்ள பாலங்கள், சாலைகள் என எதுவும் சரிவர முடிக்காமல் பாதியிலேயே வேலையை நிறுத்தி விட்டனர்.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், அனைவரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவது மட்டுமில்லாமல், விபத்துகள் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத, நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், தமிழக அரசின் அலட்சிய போக்கை கண்டித்தும், நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு, விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை இடையில் உள்ள கம்மாபுரம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை, வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.