Skip to main content

விஷ விதைகளை விதைக்க முயற்சி..! கூட்டணிக் கட்சிகளுக்கு ஈஸ்வரன் அட்வைஸ்..!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

E.R.Eswaran

 

நம் தொண்டர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைக்க முயற்சிக்கிறார்கள். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்பதுதான் உண்மை. கூட்டணி சம்பந்தப்பட்ட கருத்துகளையோ, சின்னம் சம்பந்தப்பட்ட கருத்துகளையோ கூட்டணிக் கட்சிகள் தெரிவிக்காமல் இருப்பது கூட்டணிக்கு நல்லது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக தலைமையிலான கூட்டணி, பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய அளவிற்கு வலுவான கூட்டணியாக இருக்கின்றது. கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இதைப் புரிந்து இருக்கிறார்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  

 

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை தி.மு.க வகுத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் போல தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் பணிகளை துவக்கி இருக்கிறது.

 

கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு அவரவர் கட்சி சார்பில் வர வேண்டிய தேர்தல் வாக்குறுதிகளை பற்றி கோரிக்கைகளை வைக்க தயாராகி கொண்டிருக்கிறோம். கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் பற்றியும், போட்டியிடுகின்ற சின்னங்கள் பற்றியும் கூட்டணிக்கு தலைமையேற்று இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத போது கூட்டணிக் கட்சிகள் தன்னிச்சையாக சின்னம் பற்றிய கருத்துகளை வெளியிடுவதற்கான தேவை ஏற்படவில்லை.

 

ஊடகங்களில் வருகின்ற சில வதந்திகளுக்கு பதில் சொல்கிறோம் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிடுவது கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது போல ஊடகங்கள் பேசுவதற்கு வாய்ப்பைக் கொடுத்துவிடுகிறது. ஊடகங்களில் விவாதம் என்று வரும்போது கட்சிகளின் முன்னால் தேர்தல் நிலைப்பாடுகளை பற்றியும் விவாதிப்பதை தடுக்க முடியாது.

 

எதிர்க்கட்சிகள் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு முந்தைய தேர்தல்களின் நிலைப்பாடுகளையும், தலைவர்கள் பேசிய கருத்துகளையும் விவாதித்து நம் தொண்டர்கள் மத்தியில் விஷ விதைகளை விதைக்க முயற்சிக்கிறார்கள்.

 

தி.மு.க தலைமையிலான கூட்டணி எந்தவிதமான சிறு குழப்பங்கள் கூட இல்லாமல் வலுவாக இருக்கிறது என்பதுதான் உண்மை. தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து 234 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெற்றி பெறுவதற்கான சாதக பாதகங்களை ஆலோசித்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 234-லும் நமதே என்கின்ற லட்சியத்தை நிறைவேற்ற உறுதியோடு பயணிக்க வேண்டும்.

 

Ad

 

கூட்டணி சம்பந்தப்பட்ட கருத்துகளையோ, சின்னம் சம்பந்தப்பட்ட கருத்துகளையோ கூட்டணிக் கட்சிகள் தெரிவிக்காமல் இருப்பது கூட்டணிக்கு நல்லது. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகை என்பதுகூட திமுகவின் வியூகங்களைப் பொறுத்தது.

 

அதைப்பற்றி கூட்டணி உறுப்புக் கட்சிகள் கருத்துத் தெரிவிப்பது சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். அதனால் நாம் முழு வெற்றி என்ற குறிக்கோள் ஒன்றை மட்டும் கவனத்தில் கொண்டு சில கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது'' என்று கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.