ADVERTISEMENT

“மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் ஊழல் செய்தது பா.ஜ.க தான்” - அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு!

07:23 AM Mar 25, 2024 | ArunPrakash

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான சச்சிதானந்தத்தை ஆதரித்து நத்தம் பஸ் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தவாறே நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை வைத்து கூட்டணிக் கட்சி வேட்பாளரான சச்சிதானந்தத்திற்கு வாக்கு கேட்டார். இந்த கூட்டத்திற்கு அமைச்சர் ஐ. பெரியசாமியும், மேற்கு மாவட்டச் செயலாளரும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணியும் ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் கட்சிக்காரர்களையும் பெரும் திரளாகத் திரட்டி இருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் தங்கள் மாவட்டமான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறோம். இதுவரை நீட் தேர்வு காரணமாக உயிரிழந்தவர்களான மாணவி அனிதா முதல் அனைவரின் வீடுகளுக்கும் ஆறுதல் கூறி வருகிறேன். இது குறித்து ஒன்றிய பாஜக அரசு நீட் விலக்கு மசோதாவிற்கு மௌனம் காத்து வருகிறது. ஒன்றிய அரசுக்கு நாம் ரூ.6.5 லட்சம் கோடி கொடுத்தால் அது வெறும் ரூ.1.5 லட்சம் கோடியை மட்டுமே நமக்கு தருகிறது.

ADVERTISEMENT

அதாவது ஒரு ரூபாய் மாநில அரசிடம் வாங்கிக் கொண்டு நமக்கு வெறும் 28 பைசா மட்டுமே கொடுக்கிறது மோடி அரசு. எனவே பிரதமர் மோடிக்கு இனிமேல் 28 பைசா என பெயர் கூறி அழைக்க வேண்டும். கோவிட் பாதிப்பு சமயத்தில் பிரதமர் மோடி விளக்கேற்று, தட்டைத் தூக்கு கோவிட் ஓடிரும் என்று சொல்லி ஆட்சி செய்தார். ஆனால் நமது முதல்வர் அவர்கள் அதற்கான தீர்வு தடுப்பூசிதான் என்று கூறி மக்களையும் போட வைத்து தானும் போட்டுக் கொண்டார். அது மாத்திரமல்ல கோவிட் வார்டுக்குள் சென்று பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தார். இந்தியாவிலேயே தைரியமாகவும் முன்னுதாரணமாகவும் விளங்கியவர் நமது முதல்வர். மேலும் கோவிட் பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள் தமிழக மக்களாகிய நீங்கள் தான். 2019ல் ஒன்றிய அரசு சிஏஏ சட்டம் கொண்டு வந்தது. அதிமுக ஆதரித்து வெற்றி பெற வைத்தது. ஆனால் நமது முதல்வர் அன்றும் எதிர்த்தார். இன்றும் தமிழ்நாட்டுக்குள் சி.ஏ.ஏ. சட்டத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். சி.ஏ.ஏ. சட்டத்திற்காக அதை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்து எனது அரசியல் வாழ்வில் முதன்முதலாக கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறை வைக்கப்பட்டேன்.

தமிழக முதல்வர் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் முதல் கையெழுத்து மகளிர்க்கு அரசு டவுன்பஸ்சில் இலவச பயணம் செய்யலாம் என்ற கையெழுத்து. இதன் மூலம் கடந்த 3 வருடத்தில் 455 தடவை பயணம் செய்திருக்கிறீர்கள். இதனால் மாதம் ரூ.800 முதல் 900 வரை சேமிப்பு செய்திருக்கிறீர்கள். இந்த திட்டத்தை மகளிர் நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பெண்கள் மேலாடை அணிவது, வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை என்ற பெண்களுக்கு எதிரானவை அகற்றி பெண்கள் முன்னேற்றத்தில் அன்று முதல் திராவிடக் கொள்கை முன்னிறுத்தப்பட்டு இன்று வெற்றி கண்டுள்ளது. அந்த வகையில் நமது திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி செல்லும் மகளிர்க்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டம். இதனால் நிறைய பெண்கள் பயிலும் நிலை வந்துள்ளது. இதேபோன்று மாணவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் பயன்பெற முடியும்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் நிம்மதியாகச் சென்று வருகின்றனர். 2014-ல் சமையல் சிலிண்டர் விலை ரூ. 450. இப்பொழுது மோடி ஆட்சியில் 1200 வரை உயர்ந்துள்ளது.

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500 அதிகரித்துவிடும். நமது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டர் விலை ரூ.500/- பெட்ரோல் லிட் ரூ 75/-, டீசல் லிட். ரூ 65க்கும் விற்கப்படும். நெடுஞ்சாலையில அமைக்கப்பட்டுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும். 2014ம் ஆண்டில் இருந்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 150 மட்டுமே. மோடியின் இந்த 9 வருட ஆட்சியில் 1100 சுங்கச் சாவடிகள் உள்ளது. இதன் மூலம் மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் மத்திய தணிக்கை குழு ரூ.7.5 லட்சம் கோடி பணத்தை காணவில்லை என்று கூறியுள்ளது.

இதன் மூலம் சாலை அமைப்பதற்கு 1 கி.மீக்கு ரூ.250 கோடி என்றும் 88 ஆயிரம் பேருக்கு ஒரே செல் நம்பரிலிருந்து மருத்துவ காப்பீடு திட்டம் மூலம், இறந்து போனதாக கூறி பணம் எடுத்து ஊழல் செய்துள்ளனர். மோடி, திமுகவுக்கு தூக்கம் கிடையாது என்று கூறியுள்ளார். ஆம் மோடியை ஆட்சியை விட்டு அகற்றி அவரை தூங்க அனுப்ப, தேர்தல் நடைபெற உள்ள 26 நாட்களும் திமுகவிற்கு தூக்கம் கிடையாது. எனவே சச்சிதானந்தம் வெற்றி உறுதியானது. ஆனால் ஒவ்வொருவரும் மோடி ஆட்சியின் சீர்கேடுகளை எடுத்துக் கூறி திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வைத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சச்சிதானந்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT