Skip to main content

“அதிமுகவின் எஜமானர்களான பாஜகவையும் விரட்டியடிப்போம்” - அமைச்சர் உதயநிதி

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

We will drive out BJP, the masters of AIADMK says Minister Udhayanidhi

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கில் வெற்றி பெற்று தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஸிஸ்ட்கள் ஆளத் துடிக்கின்றனர். ஆனால் அதற்காக நேரடியாக எதையும் செய்யாமல் புறவாசல் வழியாக நுழையப் பார்க்கிறார்கள். தமிழர்கள் நாம் எப்போதும் பாரம்பரிய முறைப்படி வாடிவாசல் வழியாக நேரடியாகத்தான் எதையும் சந்திப்போம். ஆனால், பாஸிஸ்ட் கட்சியான பாஜகவினர் புறவாசல் வழியாக உள்ளே வர முயற்சி செய்கின்றனர். 

 

பாஜக, அதிமுகவை தனது கிளைக் கழகமாக நடத்தி வருகிறது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொடுக்கும் கோப்புகளில் கையெழுத்து போட வேண்டிய ஒருவர் தனது வேலையை தவிர எல்லாவற்றையும் செய்கிறார். ரப்பர் ஸ்டாம்பாக செயல்பட வேண்டிய அவரை யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை யாரும் அபகரிக்கும் முயற்சி நடக்காது.

 

எத்தனை மோடிக்கள், அமித்ஷாக்கள், நட்டாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவின் தொண்டர் படையாக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை போன்ற துறைகள் செயல்பட்டு வருகிறது. அதிலும் இவர்கள் தேர்தல் நேரத்தில் வேகமாக செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் வந்தவர்கள். அதனால் மோடிக்கும் பயப்பட மாட்டோம், அமலாக்கத் துறைக்கும் பயப்பட மாட்டோம். ரெய்டு எங்களுக்குப் புதிதல்ல. ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானிக்கு எதிராக ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டது. ஆனால், அதானி மீது எந்த விசாரணையும் எடுக்கவில்லை. 

 

இது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய போது அந்த கேள்விக்கு பதில் கூறாமல் அவரது பதவியைப் பறித்தது தான் மோடி அரசு. தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட 21 கோப்புக்களில் கையெழுத்து போடாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். அந்த கோப்புகளில் பெரும்பாலானவை கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகள் தான். முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆனால் என்ன நடந்தது? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அடிமைகளான அதிமுகவை விரட்டியடித்தோம். அது போல நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அடிமைகளின் எஜமானர்களான பாஜகவையும் விரட்டியடிப்போம்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.