Minister Udhayanidhi campaign in support of Arun Nehru

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டுஇளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசுகையில், திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த பின்னர் முசிறியில் இருந்து நாமக்கல்லுக்கு நான்கு வழிச்சாலை 186 கோடியில் அமைத்துள்ளோம்.முசிறி பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம்செயல்படுத்தப்பட்டுள்ளது. முசிறி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. முசிறி பகுதி மக்களின் கோரிக்கையான முசிறி பகுதியில் அரசு மகளிர் கல்லூரி அமைக்கப்படும். முசிறி பகுதியில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு தொழிற்பேட்டை அமைக்கப்படும், விவசாயிகள் நலன் கருதி காவிரியில் இருந்து நாகையநல்லூர் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும்.

Advertisment

இது மட்டும் அல்லாது இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செய்ய உள்ளார். அதில் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் சிலிண்டர் 500 ரூபாய்க்கும் கொடுக்க உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வரியாக மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒரு ரூபாய் வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் இருந்து 29 பைசா மட்டும் தமிழகத்திற்கு திருப்பி வழங்குகிறது. மற்ற மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டிவரியை வாரி கொடுக்கிறது. இதனால் மோடி அவர்களை தமிழக மக்களாகிய நாம் 29 பைசா என கூறி அழைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு தெரியும், பத்தாண்டு காலத்தில் அடிமை அதிமுகவை வைத்துக்கொண்டு நமது மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழகத்தில் 22 பேர் இறந்துள்ளனர். 31,000 பள்ளிகளில் 18 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தை கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயல்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே போல கர்நாடகா தெலுங்கானா மாநிலத்திலும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நமது முதல்வர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியதை பார்த்து பிற மாநிலங்களிலும் செயல்படுத்துகின்றனர்.

Advertisment

இந்த காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 3 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதுதான் திராவிட மாடலின் அரசு.மேலும் கலைஞர் மகளிர் திட்டத்தில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள மகளிர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ஏழு எட்டு மாதங்களுக்குள் வழங்குவதற்கு உத்திரவாதம் தருகிறேன். பொதுமக்களாகிய உங்களிடம் கழகத்தலைவரின் மகனாகவும், கலைஞரின் பேரனாகவும் கேட்டுக்கொள்வது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அருண் நேருவுக்கு வாக்களித்து 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்” என பேசினார்.

இந்நிகழ்வில் தா.பேட்டை, தொட்டியம், முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.