ADVERTISEMENT

இளம்பெண் தற்கொலை; மாமனார், மாமியாரை எரித்துக் கொன்ற உறவினர்கள்!

04:51 PM Mar 19, 2024 | mathi23

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்ஷிகா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு அன்ஷிகாவிடம், வரதட்சணை கேட்டு அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதில் மனமுடைந்து போன அன்ஷிகா, நேற்று (18-03-24) இரவு தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர், அன்ஷிகாவின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அன்ஷிகாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களுடன் அன்ஷு வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அன்ஷிகா குறித்து அன்ஷு குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு கட்டத்தில் மோதலாக உருவாகியது. இதில் ஆத்திரமடைந்த அன்ஷிகாவின் உறவினர்கள், அன்ஷுவின் வீட்டிற்குத் தீ வைத்தனர். இதில் வீட்டுக்குள் இருந்த அன்ஷுவின் குடும்பத்தினர் மாட்டிக்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், அன்ஷுவின் தந்தை ராஜேந்திர கேசர்வானி (64) மற்றும் தாய் ஷோபா தேவி (62) ஆகியோர் பற்றி எரிந்த தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, அவர்கள் இருவர் உடலையும் போலீசார் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT