ADVERTISEMENT

ஜனாதிபதி விருந்தில் மம்தா பானர்ஜி பங்கேற்பு!

11:32 AM Sep 07, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செப்டம்பர் 9 ஆம் தேதி விருந்து அளிக்கிறார். ஜனாதிபதி திரெளபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்கள், உள்நாட்டுத் தலைவர்கள் எனப் பலர் பங்கேற்க உள்ளனர். அதற்காக ஜனாதிபதி மாளிகை சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பிதழில் ‘இந்திய ஜனாதிபதி’ என்று குறிப்பிடுவதற்குப் பதில் ‘பாரத ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் ஜி20 விருந்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி திரெளபதி முர்முவின் அழைப்பின் பேரில் மம்தா பானர்ஜி இந்த விருந்தில் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஜி-20’ மாநாட்டில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்கவும், அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவும் இரவு விருந்தில் கலந்துகொள்ளும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT